திருப்பத்தூர், அக்.8- திருப்பத்தூர் அருகே தார் சாலை அமைத்து தரக் கோரி கடந்த 75 ஆண்டுகளாக மனு அளித்து வரும் மலைவாழ் மக்களின் கோரிக்கை கள் நிறைவேற்றப்படுவது எப்போது ? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலையில் புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு என 3 ஊராட்சிகள் உள்ளன. இந்த 3 ஊராட்சிகளிலும் 36 கிராமங்கள் உள்ளன. இங்கு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மலைவாழ் மக்களின் பிரதான தொழிலாக விவசாயமும், கால்நடை வளர்ப்பும் உள்ளது. நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து மலைவாழ் மக்களுக்கு சரியான சாலை வசதிகள் இல்லை, அவர் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லை என இங்குள்ளவர்கள் பல ஆண்டு களாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஜவ்வாது மலை மட்டுமின்றி வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை, ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை பகுதியில் சாலை வசதியை மேம்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட கால மாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட போதிலும், மக்க ளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் இம்மாவட்ட மக்களிடம் அதிகம் உள்ளது. இதற்கிடையே, ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர்நாடு ஊராட்சியில் உள்ள விளாங்குப்பம் கிராமத்திற்கு செல்ல சரியான சாலை வசதி இல்லாததால் கடந்த 75 ஆண்டு களாக அங்குள்ள மலைவாழ் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி, கிராமத்தை காலி செய்து வேறு இடத்திற்கு சென்று விடலாமா? என்ற யோசனையில் இருப்பதாக அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் கூறுகின்றனர். விளாங்குப்பம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயம், கால்நடை வளர்ப்பு, கூலி வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். விளாங்குப்பம் முதல் வழுதலம்பட்டு வரை ஏறத்தாழ 4 கி.மீ., தொலைவுக்கு சரியான பாதை வசதி இல்லை. கரடு, முரடான சாலையை தான் பல ஆண்டு களாக பயணித்து வருகிறார்கள். பள்ளி மாண வர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. விளாங்குப்பம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. உயர் கல்விக்கு வழுதலம்பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு செல்ல வேண்டும். 4 கி.மீ., தொலைவுக்கு மாணவர்கள் நடந்து சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது. நடந்து வந்த களைப்பில் வீட்டுக்கு வரும் மாணவர்கள் வீட்டு பாடங்களை செய்ய முடியாமலும், படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். இந்த பிரச்சனைகள் குறித்து ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என பலரிடம் மனு அளித்தும் எந்த ஒரு தீர்வும் இதுவரை காணப்படவில்லை என்பது மலை கிராம மக்களின் குரலாகும். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் உடனடி யாக தலையிட்டு விளாங்குப்பம் முதல் வழுதலம்பட்டு கிராமம் வரை தார்ச் சாலை அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.