திருவண்ணாமலை,பிப்.19- தமிழகம் முழுவதும் காலநிலை மற்றும் மழையளவை துல்லியமாக கண்காணிக்க 1400 தானியங்கி மழைமானிகளும், 100 தானியங்கி வானிலை நிலையங்களும் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில், வெம்பாக்கம் வட்டத்தில் 3, செய்யார் வட்டத்தில் 5, சேத்துப்பட்டு வட்டத்தில் 3, ஆரணி வட்டத்தில் 4, போளுர் வட்டத்தில் 5, வந்தவாசி வட்டத்தில் 7, கலசபாக்கம் வட்டத்தில் 4, ஜமுனா மரத்தூர் வட்டத்தில் 4, செங்கம் வட்டத்தில் 10, தண்டராம்பட்டு வட்டத்தில் 7, கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் 3, திரு வண்ணாமலை வட்டத்தில் 4 என, மொத்தம் 59 தானியங்கி மழைமானியும், செய்யாறு, ஆரணி, தண்டராம்பட்டு ஆகிய வட்டங்களில் தலா 1 வீதம் 3 தானியங்கி வானிலை நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில் திருவண்ணா மலை மாவட்டத்தில் வெம்பாக்கம் வட்டத்தில் 2 இடங்களிலும், சேத்துப்பட்டு வட்டத்தில் ஒரு இடத்திலும் தானியங்கி மழைமானிகள் அமைக்க முதற்கட்டமாக அடித்தளம் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மழைமானி அமையவுள்ள இடங்களில் கம்பி வேலி அமைக்கும் பணியும் நடை பெறவுள்ளது. மேற்படி பணிகளை மேற்பார்வை செய்திட மாவட்ட செயலாக்க குழுவில் உள்ள அலுவலர்களுக்கு அறி வுரை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மேற்படி பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.