சென்னை, மார்ச் 13- இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டு சாதனைகளை கொண்டாடும் வகையில் சனிக்கிழமையன்று (மார்ச் 12) தொல்லி யல் துறை சார்பில் கோட்டை அருங்காட்சியகத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. “சுதந்திரப் போராட்டம் மற்றும் தேசிய இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் இந்திய தொல்லியல் துறையின் சார்பில் நடைபெற்றது. சென்னை வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் எம் காளிமுத்து நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ஆரோக்கிய அன்பழகி , சுதந்திரப் போராட்டம் மற்றும் தேசிய இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். சென்னை வட்ட உதவி தொல்லியல் ஆய்வாளர் வெற்றிசெல்வி பேசுகையில், மிகவும் பிரபலமான தேசியப் பிரமுகர்களை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கையும், மறைந்த புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக ஆர்வலருமான மஞ்சு பாஷினியின் பங்களிப்பை எடுத்துரைத்தார். மஞ்சு பாஷினியின் சார்பாக அவரது மரு மகள் லதா குமாரசாமி பங்கேற்று நினைவுப்பரிசை பெற்றுக்கொண்டார். சென்னை வட்ட உதவித் தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் ஆர்.ரமேஷ் நன்றி கூறினார். 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு வண்ண வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.