விழுப்புரம்,ஜூலை 9- விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் மு.கோபால் ஆய்வு செய்தார். அப்போது, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் பயன் குறித்து கேட்டறிந்ததுடன், மகளிர் அனைவரும் தினமும் பஸ்களில் பயணம் செய்யும்போது நடத்துநர்கள் இலவச பயணச்சீட்டு வழங்குகிறார்களா? எனவும், நடத்துநர்கள் தங்களிடம் கனிவான முறையில் நடந்து கொள்கிறார்களா? என கேட்டறிந்தார். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் 244 சாதாரண நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு சுமார் 1.38 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர். இது சாதாரண நகரப் பேருந்துகளில் பயணிப்பவர்களில் 65.97 விழுக்காடாகும். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் இதுநாள்வரை 4.72 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம்) கழக மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.