காரம்பாக்கம் ஜெயின் கோயிலில் 25 சவரன் நகை கொள்ளை
சென்னை, ஜன. 1- சென்னை வளசரவாக்கம் அருகே உள்ள காரம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோயிலை புதன்கிழமை காலை ஊழியர்கள் திறந்தனர். அப்போது கோயிலில் சாமிக்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 25 சவரன் நகை திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கோயில் நிர்வாகிகள், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த தடயங்களையும், கைரேகைகளையும் தடயவியல்துறை நிபுணர்களும்,கைரேகை நிபுணர்களும் சேகரித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்கின்றனர்.
முடி புனரமைப்பு சிகிச்சை மைய விரிவாக்க திட்டம்
சென்னை, ஜன.1- இந்தியாவின் முன்னணி முடி புனரமைப்பு சிகிச்சை மையமான எயுஜினிக்ஸ் ஹேர் சயன்சஸ், சமீபத்தில் ஐதராபாத்தில் புதிய கிளினிக்கை தொடங்கியது. தலையில் போதியளவு முடி இல்லாமல் உள்ளவர்களுக்கு பிரத்யோக சிகிச்சையின் மூலம் முடி உருவாக்கப்படுகிறது. இந்த கிளினிக் தென்னிந்தியவில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதியில் வருங்காலத்தில் தொடங்கப்படவுள்ளது. இதனால் இந்த நகரங்களில் உள்ளவர்கள் இந்த கிளினிக் குறித்து அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக , எயுஜினிக்ஸ் இணை நிறுவனர் டாக்டர் அரிகா பன்சல் கூறினார். இந்நிலையில் பிரபல இந்தி திரைப்பட கலைஞரான அய்கான் போனிகபூர் இந்நிறுவனத்தில் தனது அனுபவத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் இணை நிறுவனர் டாக்டர் பிரதேப் சேதி மற்றும் டாக்டர் அரிகா பன்சல் ஆகியோரும் கலந்து கொண்டு, கிளினிக்கின் முன்னணி தொழில்நுட்பங்களை விளக்கினர்.
சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஜன.1- சென்னை பட்டாளம் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அந்த கட்டிட உரிமையாளர் சாந்தி என்பவர் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளரிடம் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க செயலாளருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சாந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- மேல்முறையீட்டு மனுவை அரசுக்கு கடந்த நவம்பர் மாதம் அனுப்பி விட்டு, இந்த வழக்கை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு மனுவை பரிசீ லிக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வழங்காமல் தாக்கல் செய்யப்படும் இதுபோன்ற மனுவை ஒருபோதும் ஊக்கு விக்க முடியாது. இந்த விவகாரத்தை இழுத்து அடிப்ப தற்காக இதுபோல ரிட் வழக்குகளை தாக்கல் செய்கின்றனர். ஏற்கனவே சென்னை மாநகரமே கட்டிட காடாக மாறி வருகிறது. மிகப்பெரிய கட்டிட விதிமீறல்கள் வேறு நடந்து வருகிறது. இதனால், மழை காலங்களில் வெள்ளத்தால் அனைவரும் பாதிக்கப்படுகிறோம். சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டிடங்கள் கட்டுமானம் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும்போதே அதற்கு எதிராக அதிகாரி கள் நடவடிக்கை எடுப்பது இல்லை. மாநகராட்சி அதிகாரி கள் முற்றிலும் செயல்படாமல் இருந்து விடுகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத கட்டிடங்களினால் பொது மக்களுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையையும் பாதிக்கும் விதமாக உள்ளது. மனுதாரர் மேல்முறையீட்டு மனுவை விரைவாக பரிசீலிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகலாம் இவ்வாறு அதில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பேருந்தில் பெண் பயணியிடம் 65 சவரன் நகை கொள்ளை
சென்னை, ஜன. 1- சென்னை அரும்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வி (40). இவர்,திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வசிக்கும் பெற்றோரை பார்க்க தனது குழந்தைக ளுடன் அண்மையில் சென்றார். செல்வி, அங்கிருந்து அரசு விரைவு போக்கு வரத்துக் கழக பேருந்தில் புறப்பட்டு புதன்கிழமை அதி காலை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கி ருந்து ஒரு ஆட்டோ மூலம் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்ததும் செல்வி, தனது பையில் இருந்த பொருட்களை சரிபார்த்த போது, அதில் இருந்த 65 சவரன் நகை திருடப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், அரும்பாக்கம் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் வாகன நிறுத்த கட்டணம் ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் வசூலிக்க திட்டம்
சென்னை, ஜன.1- சென்னை மெரினா கடற்கரையில் வாகன நிறுத்த கட்டணத்தை மாநகராட்சி வசூலித்து வருகிறது. இதனால் வரும் வருவாயை அதிகரிக்க ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். மெரினா கடற்கரையில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணி மாநகராட்சி சார்பில், வருவாய் பங்கீடு அடிப்படையில் தனியாருக்கு விடப்பட்டது. தனியார் நிறுவன ஊழியர்களும், உள்ளூர் செல்வாக்கு மிக்கவர்களும் அவர்களின் விருப்பம்போல் வாகன நிறுத்தவசூலை அள்ளி குவித்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் கேட்கும் கட்டணத்தை கொடுக்காத வாகன ஓட்டுநர்களை தாக்கும் அளவுக்கு அவர்களின் அட்டகாசம் உச்சத்துக்கு சென்றது. இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில், மெரினாவில் வாகன நிறுத்த கட்டண வசூல் சேவை, முன்னாள் படைவீரர்களைக் கொண்டு இயங்கும் அரசு சார்பு நிறுவனமான டெக்ஸ்கோவிடம் (TEXCO ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணமாக வசூலிக்க கூடாது. பணமில்லா பரிவர்த்தனை முறையில் பிஓஎஸ் இயந்திரம் மூலமாக மட்டுமே கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதில் குறிப்பாக ஃபாஸ்ட் டேக் முறையை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. . இதை கொண்டு வந்தால், டோல் பிளாசா போல, மெரினா அல்லது பெசன்ட்நகர் கடற்கரை வாகன நிறுத்த பகுதிக்குள் கார் வந்தாலே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். மேலும் நவீன சென்சார்கள் மூலம் எங்கெங்கு வாகன நிறுத்த இடங்கள் காலியாக உள்ளது என செயலி மூலமாக வாகன ஓட்டிகளே பார்த்து தெரிந்துகொள்ளும் வசதியை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் நில அதிர்வு பொதுமக்கள் அச்சம்
கள்ளக்குறிச்சி, ஜன. 1- கள்ளக்குறிச்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து கிராம மக்கள் விஏஓ, தாசில்தார், வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நில அதிர்வு குறித்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும், நில அதிர்வு உணரப்பட்டது.இதனால் கிராம மக்கள் அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியது. இதைத் தொடர்ந்து எந்தெந்த பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறித்தும் எதனால் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறித்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.