சென்னை,அக்.6- சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (அக்.7) திறந்து வைக்கிறார். தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம் என்று தமிழ் வளர்ச்சிக்கும், அடித்தட்டு மக்களின் எழுச்சிக்கும் ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்தவர் கலைஞர். தமிழர் தம் வாழ்வில் நீங்கா இடம் பெற்ற கலைஞரின் நினைவைப் போற்றுவதற்காக அவரது பெயரில் கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுதந்திர தினவிழா உரையில் முதலமைச்சரால் “சென்னை கதீட்ரல் சாலையில் 6.09 ஏக்கர் நிலத்தில் 25 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும்” என்னும் அறிவிக்கப்பட்டது. உலகத் தரத்திற்கு இப்பூங்கா அமைந்துள்ள இடம் தனியார் கட்டுப்பாட்டில் இருந்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அரசால் மீட்கப்பட்டு தோட்டக் கலைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த நிலத்தில் சென்னை மாநகர மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பூங்காவை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த பிப். 27 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பூங்காவில், பரந்து விரிந்த பசுமை சூழலில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய, அரிய வகை தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டதாக அமைய திட்டமிடப்பட்டு, அதற்கான செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்கள் இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் அமைந்துள்ள உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம் பிடிக்கும் கலைஞர்களின் கலைக் கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனிமூட்டம் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 2600 சதுர அடியில் ஆர்க்கிட் குடில், அரிய வகை கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10 ஆயிரம் சதுர அடிப் பரப்பில் கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம். 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதையும் அமைத்துள்ளனர். மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறித்தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இப்பூங்கா ரூ.45 கோடியே 99 லட்சம் மதிப்பில், அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இப்பூங்காவில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகுபடுத்துகின்றன. நுழைவுக் கட்டணம் பூங்கா அனுபவத்தினை என்றென்றும் நினைவுகூரும் வகையில் நினைவு பரிசுகள் விற்கும் விற்பனை மையமும் உள்ளது. இப்பூங்காவை பார்வையிட நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250 சிறுவர்களுக்கு ரூ.200 குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150 சிறுவர்களுக்கு ரூ.75 என்றும், மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50, சிறுவர்களுக்கு ரூ.50 எனவும். கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50, சிறுவர்களுக்கு ரூ.40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50 எனவும், புகைப்பட கருவிகளுக்கு ரூ.100 என்றும், ஒளிப்பதிவு கருவிகளுக்கு ரூ.5 ஆயிரம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் வாயிலாக நுழைவுகட்டணம் குறித்தான தகவல்கள் மற்றும் நுழைவுச்சீட்டினை: https://tnhorticulture.in/kcpetickets பெறலாம். விரைவுத் துலங்கல் குறியீடு வழியாகவும் நுழைவுச் சீட்டை பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு திங்களன்று (அக்.7) மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.