சிதம்பரம், ஜன. 7- சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவல கத்தில் 40 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட் பட்ட சந்தை தோப்பு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்காமல் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதுகுறித்து பல முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அவர் மனுவை பெற்றுக்கொள்ளாமலேயே, மின் இணைப்பு வழங்க முடியாது என மனு அளித்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதே இடத்தில் வசிக்கும் பலருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய பிறகு மனுவை பெற்றுக் கொண்டு பார்க்கலாம் என அலட்சிய மாக பதில் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மனு அளித்து 1 மாத மாகியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், உடனடியாக மின் இணைப்பு வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை நகரச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் அப்பகுதி மக்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலக்குழு உறுப்பினர் மூசா போராட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர் ராஜா, விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கற்பனைச் செல்வம், பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் விஜய், தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆழ்வார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.