வால்பாறை பகுதியில் கடந்த ஆண்டு 2 வயது ஆண் புலிக்குட்டி காயங்களுடன் முடீஸ் எஸ்டேட் பகுதியில் சுற்றியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மானாம்பள்ளி வனத் துறையினர் காயமடைந்த புலிக்குட்டியை பிடித்து முகாம் கூண்டில் அடைத்தனர். பின்னர் மருத்துவக்குழுவினர் எப்படி காயமடைந்தது என ஆய்வு செய்ததில் முள்ளம்பன்றியுடன் நடந்த மோதலில் உடலிலும், வயிற்றிலும் முட்கள் குத்தி காயம் ஏற்பட்டதை உறுதி செய்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் புலிக்குட்டியின் உடலில் இருந்த முள்ளம் பன்றியின் முட்களை அகற்றி காயத்துக்கு சிகிச்சை அளித்தனர்.
பின்னர் கூண்டில் அடைக்கப்பட்டு கடந்த 7 மாதங்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்தது. எதுவும் உண்ண முடியாமல் இருந்ததால் 48 கிலோ எடை மட்டுமே இருந்தது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உணவை உட்கொள்ளும் திறனை பெற்றது. இதனையடுத்து தற்போது 144 கிலோ எடையு டன் முழு உடல் நலத்துடன் உள்ளது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் தலைமை வனப்பாதுகாவலர் புலிக்குட்டியை ஆய்வு செய்தார் அதன் பின்னர் அதனை வனத்தில் விடுவிக்க வேட்டை பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்.
புலிக்குட்டிக்கு உணவளித்து வேட்டை பயிற்சியின்போது கண்காணிக்க, பிரமாண்ட கூண்டு, மரத்தில் வனத்துறையினர் கண்காணிக்க பரண் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரூ.75 லட்சம் செலவில் திட்டம் தயாரிக்கப் ட்டது. இயற்கையான சூழலில் கூண்டு அமைத்து, அதற்கு வேட்டை திறன் மேம்படுத்த தேசிய புலிகள் ஆணையம் வழிகாட்டுதலின்படி கூண்டு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனையடுத்து மானாம்பள்ளி வனச்சரகத்தில் வனப்பகுதியில் உள்ள கூண்டிற்கு புலி கொண்டு செல்லப்பட்டு, கோவை மாவட்ட வன அலுவலர் இராமசுப்பிரமணியம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் தலைமையில் விடுவிக்கப்பட்டது.
அதனை கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு கேமரா, 2 அடுக்கு கம்பி வலைகள் சிறிய கூண்டில் இருந்து பிரமாண்ட கூண்டிற்குள் மாற்றப்பட்டது. பரணில் இருந்தபடி வனத் துறையினர் புலியை கண்காணித்து வருகிறார்கள். புலிக் குட்டி வேட்டையாட முழு பயிற்சி பெற்றதும் அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.