districts

நினைவில் மறையும் காட்சிகள்...

நினைவில் மறையும் காட்சிகள்...
முதன் முதலாக  
புத்தம் புதியதாக கைகடிகாரம் வாங்கி 
கைகளில் கட்டி அழகு பார்த்த நாட்கள் 
உங்களுக்கு நினைவிருக்கிறதா...? 
எனக்கு இருக்கிறது. 
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த போது 
எனக்கு கிடைத்த அம்மாவின் முதல் பரிசு  அது தான் .
எச்எம்டி நிறுவனத்தின் கைக்கடிகாரம் .
அடுத்து அப்பாவிடம் இருந்து கிடைத்த அலாரம் அடிக்கும் ஒரு கடிகாரம்.
நான் நேரத்தில் எழுந்து கொள்வதற்காக மற்றவர்களை எழுப்பி விடுவதற்காக...
அக்காவிடம் இருந்து வந்தது ஒரு கால்குலேட்டர்.
கணக்கு போடும் வேலைகளை எளிதாக்க..
அண்ணனும் அவன் பங்கிற்கு டூ இன் ஒன் வாங்கிக் 
கொடுத்தான். ரேடியோவும் டேப் ரெக்கார்டரும் .
இப்படி எதை எதையோ பெற்றதாக நினைவிருக்கிறது.
நான் வேலைக்குச் சென்ற பின் ஆசையாய் வாங்கியது படம் பிடிக்கும் கேமரா.
முதலில் பிலிம் ரோல் போட்டு படம் எடுப்பது. பின்னாலில் வாங்கியது டிஜிட்டல் கேமரா.
புத்தாண்டு பிறந்து விட்டால் வந்து சேரும் பரிசு மழையால் மகிழ்ந்தது உண்டு.
விதவிதமான காலண்டர்...  டைரி ...
அப்பா முதன்முதலில் தொலைபேசி இணைப்பை 
வீட்டுக்குள் கொண்டு வர எத்தனை நாட்கள் அலைந்து இருப்பார்.
மாதா மாதம் அதற்கு பணம் செலுத்த 
நான் எத்தனை நாட்கள் செலவிட்டு இருப்பேன்.
ஒவ்வொரு ஆண்டும் வந்து போகிற விழாக்கால 
கொண்டாட்டத்திற்காக வீட்டை சுத்தப்படுத்தும் போது 
குடும்பமே ஆளுக்கொரு வேலை செய்கிறபோது 
கிடைக்கும் புகைப்பட ஆல்பங்களை 
திருப்பிப் பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியானது.
முதன் முதலாக வீட்டிற்குள் வந்த கருப்பு வெள்ளை.. 
பின்னர் வந்த வண்ணக் கலர் தொலைக்காட்சி 
பெட்டியை மறக்கத்தான் முடியுமா ...? 
மகனும் மகளும் வந்த பின்னர் மிகச் சாதாரணமாக 
வாங்கும் எல்இடி எல்சிடி டிவியை தான் மறக்க முடியுமா..?
இருபது ஆண்டுகள் குடும்பத்துடன் அமர்ந்து 
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்து 
ரசித்து கொண்டு இருந்ததை மறக்க முடியுமா..? 
குடும்ப உறுப்பினர்களில் ஒருவனாய் மாறிப்போன 
தபால்காரரைத்தான் மறக்க முடியுமா...?
தாத்தாவிற்கும் பாட்டிக்கும் அப்பா எழுதும் கடிதமும்.. 
திரும்ப வரும் பதில் கடிதமும் வீட்டில் பேசு பொருளாக இருக்குமே...
வீட்டின் வரவேற்பு அறையில் கம்பீரமாய் 
காட்சி தரும்  புத்தக  அலமாரிகள் எங்கே எங்கே....? 
படிப்பது...எழுதுவது...
வகுப்பறைகள்.. எல்லாம் மாறிவிட்டதே..
எழுதுவதற்கும் வரைவதற்கும் வாங்கிய பேப்பர் 
பேனா பென்சில் ரப்பர் எங்கே ? எங்கே.....?
தாத்தா பாட்டி.. 
அம்மா அப்பா...
நான் எனது மனைவி... நாங்கள் பயன்படுத்திய வங்கி கணக்கு புத்தகம் எங்கே ..?எங்கே..? 
மகளின் புதிய இல்ல திறப்பு விழாவிற்கு போனபோது 
எதையெதையோ இழந்துவிட்டோமே என்று மனம் பதைத்தது.
இந்த ஒற்றை செல்போன் எல்லாவற்றையும் விழுங்கி விட்டது.
-ஆர்.வேலுசாமி, கோவை