districts

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு

அகர்தலா பிப்., 15- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் 12-வது சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழனன்று நடைபெறுகிறது. திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 28.13 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 20 பெண்கள் உள்பட 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 3,328 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கியமாக வங்கதேச எல்லை பகுதி வாக்குச்சாவடிகளில் எல்லைப் பாதுகாப்புப்படை தனியாக நிறுத்தப்பட்டுள்ளது. நேரடி மக்கள் சந்திப்பு வியூகத்துடன் களமிறங்கும் இடது முன்னணி - காங்கிரஸ் அணியில் சிபிஎம் - 43 இடங்களிலும், காங்கிரஸ் - 13 இடங்களிலும், சிபிஐ, ஆர்எஸ்பி, பார்வார்ட் பிளாக், ஆகிய தலா 1 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதிகளிலும் என இடது முன்னணி  60 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறங்கியுள்ளது. பாஜக கூட்டணியில் பாஜக - 55 இடங்களிலும், ஐபிஎப்டி 5 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. திரிபுராவை பிரித்து “திப்ராலாந்து’” என்ற மாநிலத்தை உருவாக்கும் கோஷத்துடன் திப்ரா மோதா கட்சி 42 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும், சிபிஎம் (எம்எல்) 1 இடத்திலும் சுயேட்சைகளாக களமிறங்குகின்றன.