திருப்பூர், ஜூலை 24- தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருக்கும் கட்டிட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் திருப்பூர் மாவட்ட கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்க வெள்ளி விழா ஆண்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் காந்தி நகரில் ப.கு.சத்தியமூர்த்தி நினைவரங்கில் ஞாயிறன்று நடைபெற்ற மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கனகராஜ் கொடியேற்றினார். துணைச் செயலாளர் எம்.கணேசன் வரவேற்றார். இம்மாநாட்டைத் தொடக்கி வைத்து சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் பேசினார். மாவட்டச் செயலாளர் ரமேஷ் அறிக்கை சமர்ப்பித்தார். கட்டுமான சங்க முன்னாள் அகில இந்திய துணைத் தலைவர் எம்.ராஜகோபால் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக டி.குமார், மாவட்டச் செயலாளராக ஏ.ராஜன், மாவட்டப் பொருளாளராக பி.ரமேஷ், துணைத் தலைவர்கள் 9 பேர், துணைச் செயலாளர்கள் 9 பேர் உள்பட 40 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.
இம்மாநாட்டில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பி.எப். திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களையும் முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்திட வேண்டும், தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும், பொங்கல் பண்டிகைக்கு அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட தொகுப்பு கடந்த காலத்தைப் போல வழங்கிட வேண்டும், இயற்கை மரண நிதி ரூ.2 லட்சம், விபத்து நிதி ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தந்தால் மட்டுமே கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறையை உருவாக்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் கட்டுமான சங்கத்துக்கு ஒத்துழைக்கும் கட்டிட பொறியாளர்கள், பில்டர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இருந்து கட்டுமான தொழிலாளர் பிரதிநிதிகள் சுமார் இருநூறு பேர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டை நிறைவு செய்து வைத்து கட்டுமானத் தொழிலாளர் சங்க சிறப்புத் தலைவர் ஆர்.சிங்காரவேலு உரையாற்றினார். முடிவில் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.