districts

img

கணவன் நினைவாக அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்டி கொடுத்த மனைவி!

கோவையில் இறந்து போன தனது கணவரை நினைவு கூறும் வகையில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு சொந்த செலவில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்து உள்ளார் மனைவி.பள்ளிக்கூட கட்டிடம் கட்டி கொடுத்த அப்பெண்மணிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். கட்டுமான நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு மணிமுத்து என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேணுகோபால் காலமானார். கணவன் இறந்த நிலையில், அவர் நிர்வகித்து வந்த கட்டுமான தொழில் நிறுவனத்தை அவரது மனைவி மணிமுத்து முன் நின்று நடத்தி வருகிறார். இந்நிலையில், பட்டணம் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி கட்டிடம் இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இதனையறிந்து மணிமுத்து தனது கணவர் நினைவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூட கட்டடம் கட்ட முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து, மணிமுத்து தனது சொந்த செலவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனது கணவர் நினைவாக தரமான பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு எடுப்பதற்கு அனைத்து வசதிகளும் கொண்ட பள்ளி கட்டிடமாக இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பேசிய மணிமுத்து, கணவன் நினைவாக இந்த பள்ளிக்கூட கட்டத்தை மாணவர்களுக்கு பயன்படுத்த கட்டிக் கொண்டிருக்கிறோம். அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளிக்கூடமாக இது இருக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வசதி செய்து கொடுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது, பணம் உள்ள பொதுமக்கள் அரசு பள்ளிகளுக்கு இது போன்ற உதவிகளை செய்ய வர வேண்டும் எனவும், இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என்றார். இந்தப் பள்ளி கட்டிடம் திங்களன்று திறந்து வைக்கப்பட்டது.