கோவையில் நடப்பு ஆண்டில் வலசை வரும் பறவைகளின் வகைகள் குறைந்துள்ளன என பறவை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவையில் உள்ள நீர்நிலைகளில் கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டி சார்பில் கடந்த ஜனவரி 9 முதல் 12 வரை வலசை வரும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டியை (சி.என்.எஸ்) சேர்ந்த தன்னார்வலர்கள் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.கணக்கெடுப்பின் முடிவில் கோவை குளங்கள், அதனை ஒட்டிய பகுதிகளில் 133 வகையான பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து சி.என்.எஸ். மூத்த உறுப்பினர் பாவேந்தன் வெளியிட்ட அறிக்கையில், 29 நீர்நிலைகளில் நடைப்பெற்ற கணக்கெடுப்பில் 27 வகையான வலசை வரும் பறவைகளும், 106 வகையான உள்ளூர் பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 2021ம் ஆண்டில் 31 ஆகவும், 2020ம் ஆண்டில் 39 ஆகவும், 2019ம் ஆண்டில் 35 என்ற நிலையில் இருந்தது.
கடந்த ஆண்டு வலசை வரும் பறவை எண்ணிக்கை 978 என இருந்த நிலையில் நடப்பாண்டில் 1,580 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உள்ளூர் பறவைகள் கடந்த ஆண்டு 6,091 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 5,858 என குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் வலசை வரும் பறவைகளான தகைவிலாங்குருவி, மஞ்சள் வாலாட்டி, நீலவால் பஞ்சுருட்டான், பொரி உள்ளான், நாணல் கதிர்குருவி போன்ற வலசை வரும் பறவைகள் பரவலாக காணப்பட்டன.
நொய்யல் வழித்தடத்தில் கீழ்நோக்கி செல்ல செல்ல குளங்களில் மாசு அதிகரித்து வருகிறது. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பல குளங்களின் கரைகள் சேதமடைந்துள்ளன. நீரின் தரம், ஆழம், உணவு, இருப்பிடம் ஆகியவற்றை பொறுத்தே பறவைகளின் வரத்து இருக்கும். இவையேதும் வலசை வரும் பறவைகளுக்கு சாதகமாக இல்லாமல் போனதால் பறவைகளின் வரத்து குறைந்துள்ளது.