உறவுகளின் வலிமையை, வலியை கீழை நாடுகளின் இலக்கியங்கள் நிறையப் பேசி வருகின்றன. அவை சினிமாக்களிலும் எதிரொ லிக்கின்றன. மனித உறவுகளை அழுத்தமாகப் பேசும் ஜப்பானிய சினிமாக்கள் நிறைய உண்டு. சொல்லப் போனால் இவ்விசயத்தில் நம்மை விட அற்புத மான சினிமாக்கள் பல ஜப்பானில் உண்டு. 1991 இல் வெளிவந்த இந்த ஜப்பானியத் திரைப் படம், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தந்தை மற்றும் அவரது பிள்ளைகள், குறிப்பாக இளைய மகன் டெட்ஸோவுக்கும் இடையிலான உறவு பற்றி ஆழமாகப் பேசுகிறது. உலகமயத்தைத் தொடர்ந்து கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து நகரங்களை நோக்கிச் சென்ற பிள்ளைகளை நினைத்து ஏங்கும் தாய் தந்தையர்களின் மன உலகம் சொற்பமாகவே படைத்துக் காட்டப்பட்டிருக்கிறது. அவ்வகையில் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.
1990 களில் ஜப்பானிலும் நகரமயம் விரைந்து வளர்ந்தது. வேலை தேடி இளைஞர்கள் நகரங் களுக்கு வந்து குவியத் துவங்கினர். ஒவ்வொரு வருக்கும் ஏதோ ஒரு வேலை இருந்தது. ஆனால் அது போதுமான கூலியையோ, மனநிறைவையோ தர வில்லை என்பதுதான் உண்மை. இந்த அவலத்தை இப்படம் பொருத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது. தந்தை அசானோவுக்கு இளைய மகன் டெட்ஸோ. படிப்பு ஏறவில்லை. டோக்கியோ சென்று கிடைத்த வேலைகளைச் செய்து வருகிறான். அசானோ, தன் மனைவி இறந்ததற்குப் பின் தனது தனிமையை கடுமையாக உணர்கிறார். மூத்த மகன் ததாஸி பட்டதாரி. திருமணமாகிவிட்டது. அவனும் டோக்கியோவில் வேலை பார்க்கிறான். மகளும், சகோதரியும் திருமணமாகிப் பிரிந்து சென்று வேறி டங்களில் வாழ்கிறார்கள். மனைவியின் முதலா மாண்டு நினைவு தினத்தன்று குடும்பத்தினர் அனை வரும் ஒன்று கூடுகிறார்கள். இரவு விருந்து நடக்கிறது. “இந்தக் கிராமத்தில் இனி தனித்திருக்க முடியாது. உன் தந்தையை அழைத்துச் சென்று உன்னோடு வைத்துக்கொள்” என ததாஸியைப் பார்த்து அத்தை கூறுகிறாள். “11 ஆவது மாடியில் எங்கள் வீடு. இங்கிருந்து வெளியே பார்த்தால் அழகிய மலைகள் தெரியுமே, அது போல அங்கு தெரியாது. கான்கிரீட் டப்பாக் களே தெரியும்” என்கிறான் மகன். “தோட்டத்தோடு இருக்கிற வீடு ஒன்றை வாங்க வேண்டியதுதானே?” எனக்கேட்கும் மாமாவிடம் கடுப்படிக்கிறான் ததாஸி. இந்த வீட்டுக்கே நான் வாங்கிய கடனை அடைக்க 30 ஆண்டுகள் ஆகும். “டோக்கியோவில் தோட்டத்துடனான வீடா?” என மிரளுகிறான். மறுநாள் அனைவரும் வேலை வேலை என்று கிளம்பிப் போய்விடுகிறார்கள்.
நான் தனியாக வாழ்ந்து விடுவேன் என்று கூறினாலும் அசானோவுக்கு உள்ளூர ஒரு பயம் இருக்கிறது. கடைசி மகன் டெட்ஸோ தன்னோடு கிராமத்திலேயே இருந்துவிட்டால் நல்லது என நினைக்கிறார். ஆனால் அவனிடம் நேரடியாக இது குறித்துப் பேசாமல் டோக்கியோவில் அவன் செய்யும் வேலைகள் குறித்து கடுமையாக விமர்சிக்கிறார். “ஏன் அங்கே கஷ்டப்படுகிறாய்?” எனக் கேட்கிறார். மகனோ தந்தையின் ஏக்கம் புரியாமல் அவரோடு சண்டை போட்டுவிட்டு டோக்கியோவுக்கு ரயிலேறுகிறான். இரும்புக் கம்பிகள் மொத்த விற்பனை செய்யும் ஒரு தொழிலகத்தில் போய் வேலைக்குச் சேர்கிறான். அங்கு கடுமையான வேலை. ஒரு வினியோக நிறுவனத்தில் வேலை செய்யும் காவ்ஸிமா என்ற பெண்ணைச் சந்திக்கிறான். கண்டதும் காதல் கொள்கிறான். அவள், காது கேளாத வாய் பேச இயலாத பெண் என்பது அவனுக்குத் தெரியாது. பின்னர், இதை அறிந்து டெட்ஸோ அதிர்ச்சியுற்றாலும் தனது காதலில் உறுதியாக இருக்கிறான். அசானோ ராணுவத்தில் வேலை செய்தவர். தனது பழைய நண்பர்களைச் சந்திக்க டோக்கியோ வருகிறார். மூத்த மகன் ததாஸி வீட்டில் வந்து தங்குகிறார். அங்கு அவருக்கு சிறிய அறையே கிடைக்கிறது. ததாஸி அதிகாலையில் கிளம்பி பின்னிரவில் திரும்புகிறான். பயணமும் வேலையும் அவனது நேரம் முழுமையையும் எடுத்துக்கொள்கிறது. கணவனையும் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு வீட்டோடு இருக்கிறாள் மருமகள் டோஸிகோ. மருமகளின் அன்பில் நனையும் அசானோ அவளது தாயின் உடல்நிலை பற்றி விசாரித்துவிட்டு “நீ ஏன் உன் தாயோடு போய் கொஞ்ச காலம் இருந்துவிட்டு வரக்கூடாது?” என அப்பாவியாகக் கேட்கிறார்.
பின் இளைய மகன் டெட்ஸோவின் அறைக்குப் போய்த் தங்குகிறார். அவன் தந்தையின் வருகையை எதிர்பார்க்கவில்லை. முதல் நாள் இரவில் அந்தச் சிறிய அறையில் தூக்கம் வராமல் தவிக்கிறார். மறுநாள் இரவு தன் காதலியோடு “டேட்டிங்” இருப்பதாகக் கூறும் டெட்ஸோ அவளை வரவேற்கத் தயாராகிறான். இருவரும் கடைக்குச் சென்று விருந்துக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறார்கள். நவீனமாயிருக்கிற நகரத்தை பார்த்து அதிருப்தியுற்று, “அந்தக் காலத்தைப் போல டோக்கியோ இப்போது இல்லை..” என்கிறார் அசானோ. மகன் டெட்ஸோ தனது காதலியை அறிமுகப்படுத்தி அவளையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறுகிறான். “காது கேளாது; வாய் பேசாது என்பதால் அவளைக் கைவிட்டு விடாதே..” என மகனை எச்சரிக்கிறார். நிச்சயமாக இல்லை என மறுக்கும் டெட்ஸோ, தந்தையின் சம்மதம் கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கிறான். தனது அன்புக்காதலியின் அண்மையில் மேற்கொண்டு தந்தை கூறும் ஆலோசனைகள் எதையும் கேளாதவனாக இருக்கிறான். குறிப்பாக “தந்தையின் எதிர்காலம்” குறித்து அக்கறையற்றவனாக இருக்கிறான். நம்பிக்கை இழந்து கிராமத்திற்குத் திரும்பும் அசானோ சோர்வுடன் தனது வீட்டை அடைகிறார். கதவைத் திறந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். திடீரென விளக்கு எரிகிறது. அசானோவின் முகம் ஒளிர்கிறது. உணவு மேசையைச் சுற்றி அமர்ந்து அவரது குடும்பத்தினர் மகிழ்வோடு உணவருந்துகிறார்கள். தானும் போய்க் கலந்து கொள்கிறார். பிள்ளைகள் அப்பா என்றவாறே அவரைக் கட்டியணைக்கிறார்கள். விளக்கு அணைகிறது. அசானோவின் கற்பனையும், முகமும் இருள்கிறது. யோஜி யமதா இயக்கிய இப்படம் ஜப்பான் அகாடமியின் சிறந்த படத்திற்கான விருது பெற்றது.