கள்ளக்குறிச்சி, பிப்.14 - சங்கராபுரம் பேரூராட்சியில் பட்டியலின மக்களுக்கு பொது கிணற்றில் இருந்து குடிதண்ணீர் எடுத்துச் செல்ல குழாய் அமைத்த வர்கள் மீது சாதி ஆதிக்க சக்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சி 7 வது வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரி. பட்டியல் இனத்தை சேர்ந்தவர். பட்டியலின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பற்றாக்குறையை போக்கு வதற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குடிநீர் மேல் தேக்க தொட்டி அமைத்து கொடுத்துள்ளார். மேலும், மாற்று சமூக மக்கள் வசிக்கும் பங்களா தெரு பகுதியின் ஆற்றங்கரை யோரம் உள்ள பொது கிணற்றிலி ருந்து குடிநீர் தண்ணீர் எடுத்து செல்ல தெருக்களில் (பைப்லைன்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு பொது கிணற்றில் இருந்து எங்கள் பகுதி வழியாக தண்ணீர் கொண்டு செல்லக் கூடாது என்று பைப் லைன் அமைக்கும் பணிகளை முத்து மகன் வல்லரசு தடுத்து நிறுத்தி யுள்ளார். மீண்டும் பிப்.13 அன்று பைப் லைன் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியைச் சேர்ந்த இளை ஞர்கள் தகராறு செய்துள்ளார். வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரியின் கணவர் கோவிந்தன், சென்னை திருவொற்றியூரை சேர்ந்த செல்வம் ஆகியோரிடம் சாதிய வன்மத்துடன் வல்லரசு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பின்னர், வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகாமையில் இருந்த வீட்டிற்குள் புகுந்து வீச்சரிவாள் எடுத்து வந்து, கோவிந்தன், செல்வம் இருவரை யும் வெட்டியுள்ளார். இதில் இரு வருக்கும் தலையிலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு, இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமா மகேஸ்வரி மற்றும் உறவினர்கள் கோவிந்தன் மற்றும் செல்வத்தை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆறுதல் இந்த தகவலை அறிந்து அரசு மருத்துவமனைக்கு சென்று சிபிஎம் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்க, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் வே.ஏழுமலை, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் வீ.சிவா ஆகியோர் கோவிந்தன் மற்றும் செல்வம் இருவரையும் சந்தித்து ஆறுதல் கூறினர். கண்டனம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஏழுமலை வெளி யிட்டிருக்கும் அறிக்கையில், பொது கிணற்றில் இருந்து பட்டியலின மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தியது மட்டுமல்ல, சாதி வெறியுடன் தாக்குதல் நடத்தியது பட்டியலின மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சாதி வன்மத்துடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய நபரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பலத்த காய மடைந்திருக்கும் கவுன்சிலர் கண வர் கோவிந்தன், பைப் லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி இருவருக்கும் தமிழ அரசும் மாவட்ட காவல் துறையும் உரிய சிகிச்சையும் பாதுகாப்பும் அளிக்க வேண்டும். சங்கராபுரம் பேரூராட்சி 7வது வார்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மேலும் மோதல் ஏற்படாமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு பட்டியலின மக்களுக்கு தெரு குழாய்கள் மூலம் குடிதண்ணீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.