ஈரோடு, மே 31- ஈரோடு அருகே கந்துவட்டி கும்பலுடன் கைகோர்த்த காவலர்களை கண்டித்தும், கந்துவட்டி கும்பலை கந்துவட்டி ஒழிப்பு தடுப்பு சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சாலைப்புதூர் பகுதியில் வசிப்பவர் சண்முகம். இவர் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வ.உ.சி.நகரை சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் குடும்ப தேவைக்காக சண்முகம், தன்னுடன் வேலை செய்யும் வசந்தி என்பவரிடம் ரூ.6 ஆயிரம் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். வாங்கிய பணத்திற்கு இரண்டு மாதம் வட்டி செலுத்தியிருக்கிறார். மூன்றாவது தவணை தேதி வருவதற்கு முன்பே கடந்த மே 6 ஆம் தேதியன்று மாலை வசந்தியின் மகன் மற்றும் இருவர் சாலைப்புதூர் வந்து சண்முகத்தை அழைத்துச் சென்றுள்ளனர். இதன்பின் அந்த கும்பல் சிலம்பரசனுக்கு வாங்கி கொடுத்த பணத்தை உடனே கொடுக்க வேண்டும் எனக்கூறி அவரிடமிருந்த செல்போனை பறித்துக் கொண்டுள்ளனர். மேலும், க.ஒத்தக்கடையில் உள்ள சக்திவேல் என்பவரது வீட்டில் அவரை அடைத்து வைத்து நான்கு பேரும் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். நள்ளிரவு ஒருமணி அளவில் அந்த கும்பலிடமிருந்து தப்பிவந்த சண்முகம் ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மறுநாள் கரூர் அரசு மருத்துவமனையில் விசாரணைக்கு சென்ற காவலர், வட்டிக்கு பணம் கொடுத்த வசந்தி மற்றும் அவரது மகள் நிவேதா ஆகியோர் முன்னிலையில் சண்முகத்திடம் வெற்று தாளில் கையெழுத்து பெற்று சென்றுள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி சண்முகத்தின் தாயார் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் கொடுமுடி-மொடக்குறிச்சி இடைக்கமிட்டி சார்பில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில், சில சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆகவே, குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் கொடுமுடி காவல்துறையைக் கண்டித்தும், கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும் கந்துவட்டி ஒழிப்பு தடுப்பு சட்டபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்ட சண்முகம் மற்றும் அவரது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுமுடி-மொடக்குறிச்சி இடைக்கமிட்டி வலியுறுத்தியுள்ளது.