கோவை, அக்.7- கோவையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்ட கல்லூரி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், வடகோவை பகுதியில் உள்ள அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கான ஆளுநர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழகத்தில் வழக்கமாக நிகழ்ச்சிகள் துவங்குவது, தமிழ் தாய் வாழ்த்துடன் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை. மாறாக தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் ஒருவார்த்தையும் கேட்காமல் தொடர்ந்து நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். இதேபோல் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று இதே கல்லூரியில் உத்திரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை. மாறாக கணபதி வாழ்த்து பாடல் மட்டும் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, உள்நோக்கத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை புறக்கணித்து இருக்க மாட்டார்கள்; நேரப்பிரச்சனையாக இருக்கும், என மழுப்பினார்.