districts

img

தமிழ்நாடு : அதிமுகவின் தனிப்பட்ட பிரச்சனையா?

சென்னை, ஜூலை 10 -  ஆளும் அஇஅதிமுகவும்,  அதன் அரசும் வேறு யாரையும் பங்கு கொள்ள விடாமல்  தனக்கே சொந்தமான “பிரத்யேக ஷோ”வாக கோவிட் 19 எதிர்ப்பு போரை நடத்திக் கொண்டி ருக்கின்றன. பூதாகரமான வைரஸ் தொற்று  பிரச்சனையை இவ்வாறு அரசு மற்றும் ஆளும் கட்சியின் தனிப்பட்ட  பிரச்சனையாகக் கையாள்வதில் உள்ள போதாமைகள் நிரூபண மாகி வருகின்றன. ஆனாலும், கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரையும் உள்ளடக்கி செயல்பட வேண்டும் என்பதை அரசு  இது வரை உணர வில்லை.

உரிய ஆலோசனைகளைப் புறக்கணிக்கும் அரசு

எதிர்க்கட்சிகள், பெரிய அளவில் ரசிகர்கள் உள்ள சினிமா நட்சத்திரங்கள், பல்வேறுதுறை வல்லுநர்கள், இந்தியன் பிரீமியர் லீக்கில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் போன்றோரை யெல்லாம்  தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுத்த மாநில அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் இதை மார்ச் மாதத்திலிருந்தே அரசிடம் வலியுறுத்தி வரு கின்றனர். ஆனால், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட ஆளும் கட்சியினர் எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை எள்ளி நகையாடி வருகின்றனர். மு.க.ஸ்டாலின் என்ன மருத்துவரா- அவரிடம் ஆலோசனை கேட்பதற்கு என்று முதல்வரே பேசினார். அவரது கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியினரும் உருப்படியான ஆலோசனைகள் ஏதும் வழங்கவில்லை என்றனர். பிரதமர் மோடி மற்றும் அருகாமை மாநில முதல்வர்கள் எல்லாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியுள்ள போதிலும், இன்று வரை தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவில்லை. முகக்கவசம் அணிதல், தனிமனித இடை வெளியைப் பராமரித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்கவில்லையென்று அமைச்சர்கள் புகார் தெரிவிக்கும் நிலையில், கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் முழுக்க முழுக்க முதல்வர் மற்றும் சில சினிமா நடிகர்கள் மட்டுமே  கையாளப்படுவதாக உள்ளது. இது மாநிலத்  தில்  பரவலான தாக்கத்தை  ஏற்படுத்தவில்லை.

இந்திய மொத்த பாதிப்பில் ஏழில் ஒரு பங்கு

தமிழ்நாட்டின் கோவிட் 19 பாதிப்பு எண்ணிக் கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியா வில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் தமிழ்நா ட்டில் மட்டும் ஏழில் ஒரு பங்காக இருக்கிறது. ஜூலை 6 இல்  தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாட்டில் ஏழு லட்சத்தைக் கடந்த போது, தமிழ்நாடு ஒரு லட்சத்தை தாண்டி இருந்தது. அதிகரித்துக் கொண்டே போகும்  பாதிப்பு எண்ணிக்கை குறைவதற்கான அறி குறிகள் ஏதும் தென்படவில்லை. ஆனாலும், சென்னையில் பாதிப்பு விகிதம் குறைந்துவிட்ட தாகவும், மாநில அரசின் நடவடிக்கைகள் பலனளிப்பதாகவும் கூறுவதை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ளவில்லை. ஜூலை 6 அன்று தலைமைச் செயலாளர்  கே.சண்முகம் மாவட்ட ஆட்சித் தலைவர்களு டன் நடத்திய காணொலி ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டங்களில் தொற்றுப் பரவலைக் கட்டு க்குள் கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். அன்றைய தினம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,978.  இதில் சென்னையில் மட்டும்  70,017  ஆகும். தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சென்னைக்கு ஈடாக மற்ற மாவட்டங்களின் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

ஆனால் தமிழக அதிகாரிகள் கொரோனா தொற்று பாதிப்பு இறங்கு முகத்தில் உள்ளதாக நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். எனினும் சென்னை நகரில் தொற்று வேகம் குறைந்து விட்டதாக முடிவுக்கு வர முடியாது. தமிழக அதிகாரிகளின் நம்பிக்கை இரண்டு விசயங்களின் அடிப்படையில் உள்ளது. முதலாவதாக, மற்ற எந்த மாநிலத்தைக் காட்டிலும்  தமிழகத்தில் அதிகமான அளவில் பரிசோதனைகள் நடைபெறுவதால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அதிகமாகக் கண்டறிய முடிகிறது; இரண்டாவதாக, கிராமப்புற தமிழகத்தில்  தொற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு உள்ளது. அரசியல் கட்சி செயல்பாட்டாளர் ஒருவர் கிராமங்களின் விழிப்புணர்வு பற்றிக் கூறும் போது, “நான் 5- 6 மாவட்டங்களுக்குச் சென்றேன்.  வெளியாட்கள் ஊர்  நுழைவாயிலை முட்களா லும் மற்ற தடுப்புகளாலும் அடைத்துள்ளனர். உள்ளூர் மக்கள் வெளியே செல்ல மாற்றுப் பாதையை பயன்படுத்துகின்றனர். பல்வேறு கிராமங்களிலும் வெளியாட்கள் ஊருக்குள் வந்து விடாதவாறு கண்காணிப்புடன் உள்ளனர்”என்கிறார். 

மற்ற மாவட்டங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

இதுபோன்ற சில நல்ல அம்சங்கள் இருப்பினும், மாநில அரசு அடிப்படை யான பரிசோதனைகளை மேற்கொள்ளு தல், தொற்றாளர்களை கண்டறிதல், தனிமைப்படுத்தல், அவர்களின் தொடர்புத் தடமறிதல், சிகிச்சை அளித்தல் ஆகிய அடிப்படைகளை பின்பற்றுவது கைவிடப்பட்டுள்ளதாக முன்னாள் பொது சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார். இந்த நடைமுறைகளை பின்பற்றுதல் பாதிப்பு குறைந்த மாவட்டத்திலும் கூட பொருத்தப்பாடுமிக்கது என்கிறார் அவர். மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை வார்டுகளில் உள்ள அனைத்து படுக்கை களுக்கு இன்னும் ஆக்சிஜன் பைப்லைன்கள் பொருத்தப்படவில்லை. இது தொற்றாளர் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே தேவைப்படுவது ஆகும். சென்னை மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கும் பிரச்சனை. சென்னையை விட குறைவான மருத்துவ வசதிகளைக் கொண்ட மற்ற மாவட்டங்களில், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கும். கொரோனாவை அரசு மட்டுமே எதிர்கொள்ளும் ஒன் மேன் ஷோவாக நடத்தும் நிலை நீடிக்கும் நிலையில், ஜூலை மாதம் தமிழகத்திற்கு மிக மிக சவாலான மாதமாக இருக்கும்.

பிரண்ட்லைன் (ஜூலை 31) இதழில் 
ஆர்.கே.ராதாகிருஷ்ணன் கட்டுரையிலிருந்து
- தொகுப்பு : ம.கதிரேசன்