மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் அகில் பாலாஜி, ஸ்ரீசம்ருதா, கே.கே.கவிதன் ஆகியோர் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பாக ஜூலை 12,13,14 ஆகிய தேதிகளில் சப் ஜூனியர் மற்றும் ஜூனியர்களுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில் நடைபெற்றது.
அனைத்து மாவட்டங்களிலிருந்து 800-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 17 வயதிற்குப்பட்டவர்கள் பிரிவில், இதில் கோவையைச் சேர்ந்த லைஃப் ஸ்பிரிங் மாணவர் அகில் பாலாஜி 200 மீட்டர் பட்டர்பிளே பிரிவில் தங்கம் (2.17 வினாடி ), 200 மீட்டர் மெட்லி பிரிவில் வெள்ளி ( 02.24 வினாடி), 400 மீட்டர் மெட்லி பிரிவில் வெள்ளி ( 5.03 வினாடி ), என மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
14 வயதிற்குப்பட்டவர்கள் பிரிவில் ஸ்ரீசம்ருதா 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் வெள்ளியும் ( 20.15வினாடி ), 11 வயதிற்குப்பட்டவர்கள் பிரிவில் 200 மீட்டர் மெட்லி பிரிவில் கே.கே.கவிதன் வெண்கலமும் (3.2 வினாடி ) பெற்று சாதனை படைத்துள்ளனர். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் நீச்சல் வீரர்கள் தேசிய நீச்சல் போட்டிக்கு தேர்வு பெறுவர்.அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 6 முதல் 11 வரை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடை பெறும் தேசிய நீச்சல் போட்டிக்கு அகில் பாலாஜி மற்றும் ஸ்ரீசம்ருதா ஆகியோர் தேர்வாகிக் கலந்து கொள்கிறார். சாதனை படைத்த நீச்சல் வீரர்களை தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க நிர்வாகிகள் மற்றும் லைஃப் ஸ்பிரிங் பயிற்சியாளர் எச்.ஜெயராஜ் உள்ளிட்டோர் பாராட்டி பதங்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.