districts

img

திருப்பூரில் குப்பை பிரச்சனைக்கு விடிவு எப்போது?

திருப்பூர், மார்ச் 9- திருப்பூர் மாநகரில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளிலும் குப்பை தொட்டிகளில் மலை போல் குப்பை தேங்கி இருப்பதால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடான நிலை உள்ளது. இப்பிரச்சனைக்கு உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்துகின்றனர். திருப்பூர் மாநகரம் விரிவடைந்து வரும் பின்னலாடை தொழில் நகரமாக இருக்கிறது. இங்கு நாளொன்றுக்கு 700 டன்னுக்கு மேல் குப்பை உற்பத்தி ஆகிறது. இந்த குப்பையை அகற்றவும், அதை அழிக்கவும் சரியான ஏற்பாடு இல்லை. இதுவரை குப்பையை சேகரித்து லாரிகள் மூலம் திருப்பூர் நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டி நிரப்பும் ஏற்பாடுதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது சுற்று வட்டார கிராம மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இதற்கிடையே திருப்பூர் மாநகராட்சி குடியிருப்புகளை தனித்தனி பகுதிகளாகப் பிரித்து, அங்கே சேகரிக்கப்பட்ட குப்பையை பிரித்துப் பக்குவப்படுத்தி மேலாண்மை செய்யும் விதத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கும் உள்ளூர் மட்டத்தில் பொது மக்களிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.  தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து புதிய மேயர், மாமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்றிருக்கும் நிலையில் குப்பை அகற்றம், திடக்கழிவு மேலாண்மைக்கு தொலைநோக்கு பார்வையுடன் தீர்வு காண வேண்டும். பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மாநகர மக்கள் எதிர்பார்க்கின்றனர். நகரெங்கும் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வரும் குப்பை பிரச்சனைக்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய சரியான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். இதுவே திருப்பூர் நகர பொது மக்கள் மற்றும் தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.