districts

img

ஆறாம் இனப்பேரழிவு - சிதம்பரம் இரவிச்சந்திரன்

 ஆறாவது ஒட்டுமொத்த இனப்பேரழிவு (6th mass extinction) தொடங்கிவிட்டது. இதனால் பூமியில் பல உயிரினங்களும் அழிந்துபோய்விடும் என்று ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரை யில் எச்சரிக்கின்றனர். பூமியில் இதுவரை ஐந்து இனப்பேரழிவுகள் நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பேரழிவுகள் அனைத்தும் அக்காலத்தில் பூமியில் வாழ்ந்த பெரும் எண்ணிக்கையிலான உயிரினங்களை பூமியில் இருந்தே முற்றிலும் அழித்துவிட்டன. பூமியின் உயிர்ப்பன்மயத்தன்மையைப் பொறுத்தவரை பேரிடர்கள் என்றும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் இந்த  ஐந்து இனப்பேரழிவுகள் மிகப்பெருமளவில் நிகழ்ந்தவை. பூமியில் இவை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின. இவற்றில் சில பூமியின் மேற்பரப்பில் நிகழ்ந்தவை. வேறு சில விண்கற்கள் போல பூமிக்கு வெளியில் இருந்து  வந்தவை. இப்போது இந்த ஐந்து அழிவுகளுக்கு சமமான நாசத்தை ஏற்படுத்தக்கூடிய உலகின் ஆறாவது ஒட்டு மொத்த இனப்பேரழிவு தொடங்கிவிட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கான சான்றுகள் சுற்றிலும் பார்த்தாலே நமக்குத் தெரியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கண்ணை மூடிக்கொண்டால்

பல ஆண்டுகளாக பூமியின் உயிர்ப்பன்மயத்தன்மையில் நிகழ்ந்துவரும் அழிவு இப்பேரழிவை நோக்கிய படிக்கட்டுகள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இயற்கையை கூர்ந்து ஆராய்ந்தால் அதில் ஏற்பட்டுவரும் உயிர்ப்பன்மயத்தன்மையின் அழிவை எவராலும் புரிந்துகொள்ள முடியும். நுண்ணுயிரிகள் முதல் பெரிய விலங்குகள் வரை உள்ள உயிரினங்களின் சமூகத்தில் இந்த மாற்றங்களை காணமுடியும். ஆனால் இதற்குப் பொறுப்பான உயர் பதவி  வகிப்பவர்கள் இந்தப் பேருண்மைகளை கண்டுகொள்ளா மல் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வா ளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் பூமியில் ஆறாவது ஒட்டுமொத்த இனப்பேரழிவு தொடங்கி விட்டதற்கான தெளிவான அறிகுறிகள் இப்போது நிகழ்ந்து  வருகின்றன என்று ஹவாய் பல்கலைக்கழக உயிரியல் ஆய்வாளர் பேராசிரியர் ராபர்ட் கோவி  கூறுகிறார். விலங்குகள் மற்றும் தாவரங்கள் திடீரென்று மறைந்து போகும் சம்பவங்கள் சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது என்று அவர் கூறுகிறார். பூமியில் வாழும் எந்த ஒரு உயிரினத்தையும் இனப்பேரழிவிற்கு உள்ளாக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே இருக்கிறது. இதுபோல உயிர்ப்பன்மயத்தன்மை, அதன் அழிவு, தன் எதிர்காலம் போன்றவை குறித்த கவலையும் மனிதனுக்கு மட்டுமே உள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார். இதுவரை நிகழ்ந்துள்ள ஐந்து இனப்பேரழிவுகளில் இலட்சக்கணக்கான உயிரினங்கள் அழிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதுவரை பூமியில் தோன்றியவற்றில் 1.50 முதல்  2.50 இலட்சம் உயிரினங்கள் அழிந்துள்ளன என்று கோவி  கூறுகிறார். இந்த ஆய்வுக் கட்டுரை பையாலஜிகல் ரிவியூஸ் (biological Reviews) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்லது. இவர் அடங்கிய ஆய்வுக்குழுவினர் நடத்திய புதிய ஆய்வுகளில் முதுகெலும்பில்லாத சிறிய உயிரினங்கள் பெருமளவில் அழிந்துவருவது தெரியவந்துள்லது. சிறிய உயிரினங்களில் ஆரம்பிக்கும் இனப்பேரழிவு விரைவில் இவற்றை சார்ந்திருக்கும் பெரிய உயிரினங்கலுக்கும் பரவும் என்று அஞ்சப்படுகிறது.

புறக்கணிக்கப்படும்  சிறிய உயிரினங்கள்

உலகளவில் உயிரினங்களின் அழிவைப் பற்றி ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிடும் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் (IUCN) போன்ற பன்னாட்டு அமைப்புகள் கூட பெரிய விலங்குகளின் அழிவிற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன என்று இந்த ஆய்வுக்குழு கவலை தெரிவித்துள்ளது. இதனால் சின்னஞ்சிறிய உயிரினங்களின் இனப்பேரழிவு கவனத்திற்கு வராமல் போகிறது. புள்ளிவிவரங்கள்படி 1500ஆம் ஆண்டு முதல் பூமியில் ஏறக்குறைய 7.5 முதல்  13% வரையுள்ள தாவர விலங்கினங்கள் மறைந்துள்ளன. இவற்றில் சுமார் 2 மில்லியன் தாவர உயிரினங்க ளும் அடங்கும். பூமியின் சரித்திரத்தை ஆராய்ந்தால் உயிர்ப்பன்மயத்தன்மை நிலைநிற்பதில் முதுகெலும் பில்லா உயிரினங்கள் பெரும் பங்கு ஆற்றிவருவதை அறியமுடியும் என்று ஆய்வுக்குழு கூறுகிறது.

கபட நாடகமாடும் மனிதன்

என்றாலும் இயற்கையைப் பாதுகாக்கப் பாடுபடுவ தாகக் கூறி மனிதன் செய்வது உயிர்ப்பன்மயத்தன்மையை மேலும் அழிக்கவே உதவுகிறது என்று ஆய்வுக்குழுவினர் கவலை தெரிவிக்கின்றனர். இது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள மனிதன் நடத்தும் கபட நாடகம். இன்று பூமியின் மேற்பரப்பில் வாழும் முதுகெலும்பில்லாத உயிரினங்களை மனிதச் செயல்கள் பாதித்திருக்கின்றன. இது விரைவில் சிறிய உயிரினங்கள், பறவைகளை பாதிக்கத் தொடங்கும். மெல்ல மெல்ல இது உணவுச்சங்கிலியில் படிப்படியாக மேல் நோக்கிச் செல்லும். மற்ற விலங்குகளையும் பாதிக்கும். இனி எவ்வளவு முயன்றாலும் குறிப்பிட்ட பெரும்பகுதி உயிரினங்களை இனப்பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியாது என்று இந்த ஆய்வு கூறுகிறது. இன அழிவு நிகழ்ந்த உயிரினங்களை அருங்காட்சியகங்களில் வைத்து  ஆராய்வதை, புனரமைப்பு செய்வதை விட்டுவிட்டு ஆய்வா ளர்கள் அழியும் ஆபத்தில் இருக்கும் மற்ற உயிரினங்களை காப்பாற்ற உடனடியாக முயற்சிக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். இனியும் தாமதித்தால் இயற்கையின் நேரடிக் குறுக்கீட்டால் மட்டுமேயல்லாது மனிதனால் நிகழும் பல உயிரினங்களின் ஒட்டுமொத்த மரணத்தைத் தடுத்து நிறுத்தமுடியாது. இதன் பலனாக ஏற்படும் பேரிடர்களை மனிதன் அனுபவிக்கவேண்டிவரும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.