கோவை மாநகராட்சி, ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் பயிற்சி மேற்கொண்டதாக வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிக்க யார் அனுமதி வழங்கியது? யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? அத்துமீறி நுழைந்தவர்கள் மீது வழக்கு உள்ளதா? என பல்வேறு கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இது தொடர்பாக ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எழுத்துப்பூர்வமாக எந்த அனுமதியும் மாநகராட்சி சார்பில் வழங்கப்படவில்லை. எனவே அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்ததாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பிதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் வடக்கு துணை ஆணையாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கை இதுவரை வரவில்லை என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தலைமை ஆசிரியருக்கு எந்த தகவலும் வரவில்லை, அனுமதியும் கோரவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரிலேயே அவர்கள் உள்ளே சென்று இருக்கிறார்கள். எனவே தலைமை ஆசிரியர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க என்ன காரணம் எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு மட்டுமல்லாமல், உதவி செயல் பொறியாளருக்கும் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றும் இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஏற்கனவே தகவல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் மாநகராட்சி பள்ளிக்குள் நுழைந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எல்லாம் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். தற்போது அத்துமீறி நுழைந்தவர்கள் மீது பொதுவான வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , விசாரணைக்கு பின்னர் அவை மாற்றப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்தார்.