நாமக்கல், ஜூலை 23- பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஆகாயத்தாமரைகளால் குடிநீர் மாசு ஏற்படும் அபாயம் உள்ளதால், ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் ஈரோட்டினை இணைக்கும் வகையில் காவிரி ஆறு உள்ளது. இந்த காவிரி ஆற்றில் தற்பொழுது நீர்வரத்து குறைவின் காரணமாக பள்ளிபாளையம் பகுதியில் மட்டும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆகாயத்தாமரை படர்ந்து உள்ளது. நீர் தன்மை தெரியாமலேயே வெறும் ஆகாயத்தாமரைகளாகவே காட்சி அளிக்கும் காவிரி ஆற்றில் விஷ ஜந்துக்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆகாயத்தாமரை தொடர்ந்து அதிகமாக பரவி வருவதால், நீர் மாசு ஏற்பட்டு பொது மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இந்த ஆகாயத்தாமரைகள் நீரில் அடித்து செல்லப்பட்டால், கதவனை மின் திட்டங்களில் இயந்திரங்களும் பாதிக்க கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.