districts

ரேலியா அணையில் விரிசல்: சரி செய்ய கோரிக்கை

உதகை, செப்.12- குன்னூரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் ரேலியா அணையில் சிறிய விரிசல் ஏற்பட்டு, தண்ணீர் கசிந்து வருகிறது.  இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 30 வார்டுகளுக்கு நீராதாரமாக ரேலியா அணை விளங்கி வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அப் போதைய குன்னூர் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இந்த அணை கட்டப்பட்டது. 43.7 அடி கொள்ளளவில் கடந்த 1941ஆம் ஆண்டு ரேலியா அணை திறக்கப்பட்டது. இந்த  அணையில் இருந்தே குன்னூர் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு குன்னூர் மற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. இதனால் ரேலியா அணை தற்போது 41 அடி நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், அணையின் தடுப்பில் இருந்து சிறிய விரிசல் ஏற்பட்டு அதன் வழியே தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அணை நிரம்பியுள்ளதால் தொடர்ந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டிய அணை என்பதால் அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.