districts

img

ஆட்சி அதிகாரத்தில் மத ஆதிக்கம்: மோசமான சூழலை உருவாக்கும் என்பதற்கு இலங்கை சம்பவங்களே சாட்சி - கே.பாலகிருஷ்ணன்

மலையக தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கம் சாா்பில் ‘மலையகம் 200’ என்ற தலைப்பில் பன்னாட்டு மாநாடு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, இலங்கை தமிழா் நல ஆலோசனைக் குழு துணைத் தலைவா் கலாநிதி வீராசாமி, தந்தை பெரியாா் திராவிடா் கழக பொதுச் செயலாளா் கு.இராமகிருட்டிணன், தாயகம் திரும்பிய மலைகத் தமிழா்கள் பலா் கலந்துகொண்டனா்.

 

 

 

 

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது, இஸ்ரேல் - பாலஸ்தீனம் தொடங்கி இலங்கை வரை உலக வரலாற்றில் ஆட்சியாளர்கள் மக்கள் ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இந்தியாவில் மக்கள் ஒற்றுமையாக இருந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் வருணாசிரம கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஆனாலும் சுதந்திரத்திற்காக சாதி, மத பேதங்களை கடந்து இந்திய மக்கள் ஒற்றுமையுடன் போராடினார்கள். அப்படி ஒரு ஒற்றுமை இக்கட்டான சூழ்நிலையில் கூட இலங்கையில் ஏற்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது‌. படிப்படியாக இலங்கையில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதற்காக மலையகத் தமிழர்கள் போராடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் யாழ்ப்பாண தமிழர்கள், மலையகத் தமிழர்கள், சிங்களவர்களின் பிரச்சனை வெவ்வேறாக இருந்தாலும் அவர்கள் சேர்ந்து விடக்கூடாது என்பதில் அங்கிருக்கும் அரசு கவனமுடன் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் மதம் ஆதிக்கம் செலுத்தினால் அது எவ்வளவு மோசமான சூழலை உருவாக்கும் என்பதற்கு இலங்கை சம்பவங்களே எடுத்துக்காட்டு. மதவெறியர்கள் ஆட்சி செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டால் மதச்சார்பின்மை மட்டுமல்ல மனிதர்களும் படுகொலை செய்யப்படும் நிலை ஏற்படும். இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் மலையகத் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது.

மலையகத்தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து  போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தாயகம் திரும்பிய மலையகத்தமிழர்கள் தங்கி தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் டான் டீ நிறுவனம் மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. டான் டீ நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை மலையகத் தமிழர்களுக்கு பிரித்து வழங்க முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்துக்கு வந்தபோது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கும்போது, இலங்கையில் இருந்து வந்த இந்துக்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் ஒன்றிய மோடி அரசாங்கம் மறுத்து விட்டது. மோசமான குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை கொடுத்தபோது அதனை முற்றிலும் நிராகரித்தது ஒன்றிய பாஜக அரசு. இலங்கையில் நிலவும் பொருளாதார சூழல் அங்கிருக்கும் அனைத்து சமூக மக்களையும் போராட வழிவகுக்கும். இலங்கையில் இருக்கும் மலையகத்தமிழர்கள் முழு உரிமைகளையும் பெறும் காலம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.