உடுமலை, ஏப்.9- உடுமலையில் கோவில் திருவிழாவையொட்டி, பொருட்காட்சியில் உணவுப் பொருட்களின் விலை உயர்வும், சுகாதாரம் இன்மையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டத் திருவிழா ஏப்.13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவையொட்டி, தளி சாலையில் உள்ள குட்டைத்திடலில் பொருட்காட்சி நடைபெறுகிறது. இங்கு தினந்தோறும் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது. குறிப்பாக, இங்குள்ள அனைத்து வகையான ராட்டினங்களில் விளை யாடுவதற்காக பதின்ம வயதுப் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். இந்த ராட்டினங்களில் கட்டணமாக நூறு ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் வந்தால், குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் செலவாகிறது. மேலும், டெல்லி அப்பளம், குளிர் பானங்கள் விலையும் கூடுதலாகவே உள்ளது. விலை குறைந்த தின்பண்டங் களும் பெயரளவில் தான் உள்ளது. திருவிழாவில் குழந்தைகளுடன் பெற்றோர்கள், உறவினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடு வார்கள். தற்போது திருவிழா என்றால் விலை உயர்வுதான் பெற்றோர்களுக்கு நினைவுக்கு வருகிறது. இதுகுறித்து பொருட்காட்சியில் கடை வைத்திருப்பவர் கூறியதாவது, பொருட்காட்சியில் கடை வைப்பதற்கு ஏலத்தொகையை வருவாய்த் துறை யினர் அதிகரித்துள்ளனர். இதனால் தான் ராட்டினம், டெல்லி அப்பளம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் ஏலத் தொகையை குறைந்து நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றனர். பொருட்காட்சியில் போதுமான சுகாதாரம் இன்றி உள்ளது. இங்கு குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்படவில்லை.இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தனர்.