நாமக்கல், ஏப்.22- தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கபிலர் மலை ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய சோளிபாளையத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது குடிநீர் குழாய் உடைந்ததால் கடந்த சில நாட்களாக பெரியசோளிபா ளையம் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்து வந்தது. இதன்பின் குடிநீர் குழாய் சரிசெய்யப் பட்ட நிலையில், பொதுமக்களுக்கு சேறும், சகதியும் கலந்து குடிநீர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வெள்ளியன்று தூய்மை யான குடிநீரை பெரியசோளிபாளயம் ஊராட்சி நிர்வாகம் வழங்கக்கோரி கபிலர்மலையில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் முஸ்டபரப்பு பகுதியில் சேறும் சகதியும் கலந்த தண்ணீர் குடத்துடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் மற்றும் பெரியசோளிபாளயம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, சுகாதாரமான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.