சென்னை, மே 18-பொன்பரப்பி வன்முறை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமைபாதுகாப்புக்குழு கள ஆய்வு செய்துஅறிக்கை தயாரித்துள்ளது. அந்த உண்மைஅறியும் குழுவின் அறிக்கையை சனிக்கிழமையன்று (மே 18) சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:பொன்பரப்பியில் நடைபெற்றது இரண்டு சாதிகளுக்குள் நடந்த மோதல் அல்ல. அரசியல் ஆதாயத்திற்காக, வன்னிய சாதியை பயன்படுத்தி தலித் மக்கள் மீது பாமக மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியது. மக்களைவாக்களிக்க விடாமல் தடுக்கும் நோக்கோடுநடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இந்து முன் னணியும், அதன் தலைவர் ராஜசேகரனும் பிரதான பங்கு வகித்துள்ளனர். அரசியல் வெற்றிக்குசாதியை பயன்படுத்துவது, தலித் மக்களின்வாக்குகளைபறிப்பது ஜனநாயக விரோதமானது.இந்த வன்முறையில் முக்கிய பங்குவகித்த ராஜசேகரன் மீது கூடுதல் வழக்கு பதிவு செய்யவில்லை. அவரை கைது செய்யாமல் உள்ளனர். அரியலூர் நந்தினி என்ற பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட வழக்கில் பிரதான குற்றவாளி ராஜசேகரன். அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை தயக்கம் காட்டுவது ஏன்?
திருமாவளவன் வெற்றிபெறக்கூடாது என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட அந்த வன்முறையால் சுமார் 300 தலித் மக்கள் வாக்களிக்க முடியவில்லை. எனவே, அங்கு மறுவாக்குபதிவு நடத்த வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்து கொண்டதாக கருத முடியாது.திட்டமிட்டு தாக்குதல் நடத்திய பிரிவினர், பாதிப்புக்கு உள்ளான தலித் மக்கள் என இரு தரப்பினர் மீதும் சம எண்ணிக்கையான நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது நேர்மையான விசாரணைக்கு முரணானது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சிபிசிஐடி விசாரணை
செய்தியாளரின் கேள்விகளுக்கு கே.பாலகிருஷ்ணன் கூறிய பதில்கள் வருமாறு:கருவேப்பிலங்குறிச்சியில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் எந்த சாதி என்றுபார்க்கவில்லை. சிபிசிஐடி விசாரணை கோருகிறோம். கொடூரமான அந்த கொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குற்றவாளி யாராகஇருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.வடதமிழகத்தில் தீண்டாமை, ஏற்றத் தாழ்வு, சிறுசிறு மோதல் இருந்தது. ஆனால்,பாமக அரசியல் களத்திற்கு வந்த பிறகுதான் அணிதிரட்டப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறை தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. 1980களில் தொடங்கி பாமக நடத்திய தாக்குதல்களிலிருந்து வட மாவட்டங்களில் தலித் மக்களை உறுதியாக நின்று மார்க்சிஸ்ட் கட்சிபாதுகாத்து வருகிறது.வாழ்நிலையில் ஒரே மாதிரி உள்ள இருதரப்பினரும் சண்டையிடக்கூடாது என்று வலியுறுத்துகிறோம். வன்முறை சம்பவங்கள் நிகழும்போது அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து அமைதி கூட்டங்களை நடத்தியுள்ளோம். பாமக உள்ளிட்ட கட்சிகளை அழைத்து தீண்டாமை ஒழிப்பு மாநாடுநடத்தியுள்ளோம்.5வருடம் பிரதமராக இருந்து மோடி ஒருமுறை கூட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வந்தது.எனவே, வெளியேறப்போகிறோம் என்பதால் ஒரு சந்திப்பை நடத்தியிருக்கிறார். அதிலும் அவர் பேசவில்லை.
தகுதி நீக்கம்?
தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கோவில்கல்வெட்டில், தேனி தொகுதிஅதிமுக வேட்பாளரும், துணை முதலமைச்சரின்மகனுமான ரவீந்திரநாத் எம்.பி என வைத்துள்ளனர். வாக்குபதிவே முடியவில்லை. வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை. ஆனாலும் எம்.பி., என போட்டுக் கொள்கிறார்கள்.இதை தேர்தல் ஆணையம்எப்படி வேடிக்கை பார்க்கிறது. ரவீந்திரநாத்தை தகுதிநீக்கம் செய்ய இது ஒன்றேபோதுமானது. பொன்பரப்பியில் மறுவாக்கு பதிவு கோரினால் நடத்த மறுக்கிற தேர்தல்ஆணையம், தேனியில் கேட்காமலே நடத்துகிறது. வாக்குப்பதிவு எந்திரங்களைஅங்கு கொண்டு செல்கிறது. இவையெல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. எம்.பி., என்று போட்டுக் கொள்ளும் அளவுக்கு நம்பிக்கை தரத்தக்க வகையில் மோசடி செய்துள்ளனர். அதற்கு தேர்தல் ஆணையம் துணைபோயிருக்கிறது.ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு வாக்கு சீட்டு சென்று சேரவில்லை. மோசடியான தேர்தலாக இதை மாற்றிவிடுவார்களோ என்றஅச்சம் உள்ளது. மக்களின்வாக்குகளை மோசடி மூலம்தான் நிர்மூலமாக்குவதற்கான முயற்சிதான் அந்த கல்வெட்டு.
விழிப்புணர்வு பிரச்சாரம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 5-10வரை அனைத்து ஒன்றியங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த உள்ளோம். கெயில் நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறது. தரங்கம்பாடி போன்ற இடங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை தடுப்பது, அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வருகிறோம். காவிரிமண்டலத்தை பசுமை மண்டலமாக பாதுகாக்க வேண்டும். பிற அமைப்புகளை ஒருங்கிணைத்து அடுத்தடுத்து போராட்டம் நடத்துவோம்.
மோடியின் கைப்பாவை
மோடி, அமித்ஷா மீதானபுகார்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம்தான் மோடிக்கு ஒரே நம்பிக்கையாக உள்ளது. தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தொடர்ந்து ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளார். சிலர் வழக்கு தொடுத்துள்ளனர்.வாக்கு பதிவு எந்திரத்தின் மீது சந்தேகம் எழுந்தபிறகுதான் ஒப்புகை சீட்டு எந்திரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதை முழுமையாக அல்லது 50 விழுக்காடு எண்ணுவதில் என்ன பிரச்சனை? தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க மோடியின் கைப்பாவையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசு மெத்தனம்
கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, “ சாதிய கொடுமைகளுக்கு தீர்வுகாண தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். அனைத்து கட்சி,அமைப்புகளின் கருத்துக்களை கேட்டு தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சாதிய கொடுமை பிரச்சனையில் மெத்தனமாக செயல்படுகிறது” என்றார்.இச்சந்திப்பின்போது மனித உரிமை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.செல்வா, உறுப்பினர்கள் லலிதா, ஆர்.முரளி, எஸ்.குமார், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.