districts

img

கோடநாடு வழக்கு: சந்தோஷ் சாமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக 8 ஆவது குற்றவாளியான சந்தோஷ் சாமியிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 

கடந்த 2017ல் நடைபெற்ற கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், உள்ளிட்ட  12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு தற்போது வரை 200க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடைபெற்றுள்ளது. கோடநாடு எஸ்டேட்டிலும் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அதே போலச் சம்பவம் நடந்த அன்று கோடநாடு எஸ்டேட் பகுதியில் பதிவான தொலைப்பேசி ஆடியோ பதிவுகளைச் சேகரித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள சயான், மனோஜ், உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீஸார் மறு விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கில் 8 ஆவது குற்றவாளியான சந்தோஷ் சாமியை விசாரணைக்கு ஆஜராக போலீஸார் சம்மன் அளித்தனர்.

இன்று விசாரணைக்காகக் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி விசாரணை அலுவலகத்தில் சந்தோஷ் சாமி ஆஜரான நிலையில், அவரை காந்திபுரத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையை  போலீஸார் வீடியோவாக பதிவு செய்கின்றனர்.