districts

img

தேவையில்லாத சான்றிதழுக்கு அலையவைத்த அதிகாரிகள் மாற்றுத்திறனாளி தங்கையை தூக்கிக்கொண்டு அலைந்த அவலம்

கோவை, பிப்.5- அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், தேவை யில்லாத சான்றிதழுக்காக பழங்குடி மாற்றுத்திறனாளி தங்கையை தூக்கிக்கொண்டு அலைந்த அவல நிலை ஏற்பட்டது. கோவை மாவட்டம், ஆனைமலை, தேவன்சபுதூர் மலசர் பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணி (44). இவரது தங்கை கிட்டாத்தாள் (40). நடக்க முடியாத மாற்றுத்திறனாளியான கிட்டத்தாளுக்கு தமிழக அரசின் மாற்றுத்திறனாளி நல்வாழ்வுத் துறை சார்பாக ரூ.1500 உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஏழு மாதங்களாக உதவித் தொகை வராமல் நின்றுள்ளது. இது குறித்து கிட்டாத்தாள், அண்ணன் மணி உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைவர்களி டம் தெரிவித்து நடையாக நடந்துள்ளார். ஆனால், எந்த முடிவும் கிடைக்கா ததால், இறுதியாக ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் புதிதாக கிட்டாத்தாளுக்கு மாற்றுத் திறனாளி சான்றிதழ் வாங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இறையடுத்து மணி தனது தங்கை கிட்டாத்தாளை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், அந்த சான்றிதழ் வழங்கும் மருத்துவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இல்லாததால், அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பேருந்து மூலம் திங்களன்று மணி தங்கையை தூக்கிக் கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது கோவை அரசு மருத்துவ மனையில் இருந்த ஊழியர்கள் காலை நேரத்தில் மட்டுமே மாற்றுத்திறனாளி களுக்கான சான்றிதழ் வழங்கும் பணி நடைபெறும், எனவே மறுநாள் வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மீண்டும் தனது சகோதரியை தூக்கிக் கொண்டு மணி தனது பழங்குடி கிராமத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் கிட்டாத்தாள் மற்றும் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மணி கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். நீண்ட நேர மாக காத்திருந்தும் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில்,  இதுகுறித்து கோவை அரசு மருத்துவ மனை முதல்வர் நிர்மலாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் விசாரித்த போது கிட்டாத்தாள் ஏற்கனவே வைத்துள்ள மாற்றுத்திறனா ளிக்கான சான்றிதழ் போதுமானது எனவும், புதிதாக சான்றிதழ் எதுவும் பெற வேண்டாம் எனவும் தெரிவித்தார். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகத்தில் சென்று விசாரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.  இதையடுத்து மணி மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசிய போது புதிய சான்றிதழ்கள் ஏதும் தேவையில்லை. ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்திலேயே அதனை சரி செய்து விடலாம் என தெரிவித்துள்ளனர். மேலும், வீடு வீடாக மாற்றுத்திறனாளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது கிட்டாத்தாள் வீட்டில் இல்லாததால் அவரது பெயர் நீக்கப்பட்டதும், முறையான வழிகாட்டுதல் இல்லாததால் கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டர் வரை மாற்றுத்திறனாளி தங்கையை அழைத்துக் கொண்டு அண்ணன் மணி சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக மீண்டும் மாதந்தோறும் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்திற்கான உதவித்தொகை மார்ச் மாதத்தில் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறையான ஆய்வு மேற்கொள்ளாததாலும், விவரங்கள் சரியாக தெரியாத பாமர மக்களுக்கு சரியான வழிகாட்டு முறைகளை கூறாமல் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.