ஈஷா மையத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளை ஈஷா ஊழியர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈஷா யோகா மையத்திற்கு இன்று திருப்பூரை சேர்ந்த கர்ணன் தனது குடும்பத்தினருடன் சுற்றிப் பார்க்க வந்துள்ளனர். அப்போது ஈஷா யோகா ஆதியோகி சிலைக்கு முன்புறம் உள்ள பார்க்கிங்கில் பணியில் இருந்த முத்துசெல்வம் என்பவரிடம் காரை ஓட்டி வந்த மகேஷ்குமார் 100 ரூபாயை எடுத்து கொடுத்திருக்கிறார். மீதி சில்லறை இல்லை என்று முத்துக்குமார் கூற இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் வண்டியில் இருந்தவர்கள் இறங்கி ஆதியோகிசிலைக்கு நடந்து சென்றிருக்கின்றனர். அப்போது ஈஷா ஊழியர்கள் முத்துசெல்வமும், நந்தகுமார் என்பவரும் மகேஷ்குமாரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில், மகேஷ்குமாருக்கு உதட்டிலும்,வலதுகை மணிக்கட்டுக்கு கீழேயும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்ணன் குடும்பத்தினர் அனைவரும் ஆதியோகி சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகவலறிந்த ஆலாந்துறை உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் கர்ணன் குடும்பத்தாரை சமாதானப்படுத்தி காவல் நிலையம் அழைத்து வந்து ஆலாந்துறை பொறுப்பு காவல் ஆய்வாளர் பர்வீன்பானு மேற்படி விசாரணை செய்ததில் ஈஷா ஊழியர் முத்துச்செல்வம், கர்ணன் மற்றும் மகேஷ்குமாரிடம் ஈஷா சார்பில் மன்னிப்பு கோரியதை ஏற்றுக் கொண்டு இருதரப்பும் சமாதானமாக சென்றுள்ளனர்.
இருப்பினும் ஈஷா மையத்திற்கு சுற்றுலா வந்த பயணிகளை ஈஷா மைய ஊழியர்களே தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.