districts

img

எல்ஐசி பங்குகளை விற்பது தேசவிரோதம் : ஒன்றிய அரசை கண்டித்து இன்சூரன்ஸ் ஊழியர்கள்  வெளிநடப்பு – வேலை நிறுத்தம்

கோவை, மே. 5 – எல்ஐசி பங்குகளை விற்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவையில் எல்ஐசி ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய அரசுக்கு நிதியை அள்ளித்தரும் பொதுத்துறை நிறுவனங்களின் அட்ச்சய பாத்திரமாக எல்ஐசி திகழ்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து சூறையாடுவதையே பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கொள்கையாக வைத்துள்ளது. கார்ப்ரேட்டுகள் கொள்ளை லாபம் பார்க்க மக்களின் சேமிப்பை சூறையாடும் முயற்சியில் மோடி அரசு ஈடுபடுகிறது. இதன் ஒருபகுதியாக எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை அறிவித்து இதனை துவங்கியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) இரண்டு மணி நேர வெளிநடப்பு வேலை நிறுத்த போராட்டத்தை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அறைகூவல் விடுத்தது. இதனையேற்று எல்ஐசி பங்குகளை விற்கக்கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை சீர்குலைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், எல்ஐசி பங்குகளை விற்பது தேசதுரோகம் என குற்றம்சாட்டி கோவையில் அனைத்து இன்சூரன்ஸ் அலுவலகங்களிலும் காலை 11.30 மணிமுதல் 1.30 மணி வரை இரண்டு மணி நேர வெளிநடப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஈடுபட்டனர். முன்னதாக கோவை திருச்சி சாலையில் உள்ள இன்சூரன்ஸ் கோவைப்பகுதி தலைமை அலுவலகம் முன்பு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவைப்பகுதி தலைவர் எம்.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இனை செயலாளர் எம்.கிரிஜா, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இனை செயலாளர் வி.சுரேஷ், கோவை பகுதி செயலாளர் துளசிதரன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். முன்னதாக எல்ஐசி  பங்கு விற்பனைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர்.  கோவையில் நூறு சதவீத இன்சூரன்ஸ் ஊழியர்களும்  ஒன்றிய அரசை கண்டித்து இரண்டு மணி நேர வெளிநடப்பு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.