சில அரசியல் கட்சிகளில் எந்தவிதமான சமூகப் பங்களிப்பும் இல்லாமல்கூட எம்பி, எம்எல்ஏக்களாகிடலாம். அதில் சிலர் அமைச்சராகி மாண்புமிகுக்களாக வலம் வருவதும் உண்டு. பிரதிபலனை எதிர்பாராத கம்யூனிஸ்;டுகள் மக்களுக்காக உழைத்துக்கொண்டே இருக்கின்றனர். மத்திய, மாநில ஆட்சியாளர்கள் அவ்வப்போது மக்களுக்கான நலத்திட்டங்களை கொண்டுவந்து இருக்கிறார்கள் என்று சொன்னால், நிச்சயமாக அதற்குப் பின்னால் கம்யூனிஸ்டுகளின் போராட்ட வரலாறு இருப்பதை மறுக்க முடியாது. தமிழக கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் வாழும் வரலாறாக தோழர்கள் என்.சங்கரையா, ஆர்.நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து வழிகாட்டி வருகின்றனர். இவர்களோடு இணைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியை வேர்பரப்பிய தோழர்கள் பலர் உள்ளனர். அந்த வரிசையில் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்திலும், பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பணியாற்றிய முக்கிய ஆளுமைகளில் ஒருவர் தோழர் பெரி.குமாரவேல்.
1945-46-ஆம் ஆண்டுகளில் அப்போதைய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், எம்பியாக இருந்தவருமான வல்லத்தரசோடு இணைந்து மாணவர்களைத் திரட்டி சுதந்திரக்கொடியேந்தி ஊர்வலம் சென்றபோது குமாரவேலுவுக்கு வயது 14. 9-ஆம் வகுப்பிலேயே பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கருஞ்சட்டை அணிந்து மாணவர்களிடம் பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கொண்டார். சோவியத் ரஷ்யா சென்றுவந்த அனுபவத்தையும், கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பேராட்டங்களையும் விடுதலைப் பத்திரிக்கையில் படித்தபிறகு கம்யூனிச சித்தாந்தம் மீது பற்று ஏற்பட்டது. தலைமறைவாக இருந்த தோழர் பி.ஆர்.நாச்சிமுத்து மூலமாக 1949 துவக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பள்ளிக் காலத்தில் மாணவர் பெருமன்றத்தின் சார்பில் மாணவர்பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். குலக்கல்விக்கு எதிராக டி.கே.சீனிவாசன், வல்லத்தரசு உள்ளிட்ட தலைவர்களை அழைத்து புதுக்கோட்டையில் பொதுக்கூட்டங்களை நடத்தினார். கல்லூரி காலத்தில் மாணவர் பெருமன்றத்தின் அகில இந்தியத் தலைவர் சத்தியாபால்டான், மாநிலச் செயலாளர் கார்த்திக்கோபல் உள்ளிட்டோரை புதுக்கோட்டைக்கு அழைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றச் செய்தார். கல்லூரியில் தமிழ் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கி.ஆ.பெ.விஸ்வநாதம், ஒளவை துரைசாமிபிள்ளை, இரா.நெடுஞ்செழியன் உள்ளிட்ட ஆளுமைகளை அழைத்து உரையாற்ற வைத்தார். சேர்ந்திசைக்குழுத் தலைவர் எம்.பி.சீனிவாசன் மற்றும் வேணுகோபால், பி.ஆர்.நாச்சிமுத்து உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அடிக்கடி இவரது அறைக்கு வந்து தங்குவதை மோப்பம்பிடித்த போலீசார் ஷபெரி.குமாரவேலையும் அவரது நண்பர்களையும் அறையிலேயே வைத்து பூட்டி சிறைவைத்தது காவல்துறை.
வல்துறை. கம்யூனிஸ்ட் கட்சிக்கான தடை நீக்கப்பட்ட பிறகு சீர்காழியில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநாட்டில் கல்லூரி மாணவராக பங்கெடுத்தார். அன்னவாசல் ரெங்கசாமியோடு இணைந்து புதுக்கோட்டை சமஸ்தானத்தில் விவசாயிகள் சங்கத்தை கட்டி வளர்த்தார். ஒரே காலகட்டத்தில் மாணவர்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் பல்வேறு இயக்கங்களை திறம்பட நடத்தியுள்ளார். இயக்கப் பணிகளுக்கிடையில் சர்வீஸ் கமி~ன் தேர்வு எழுதி 1956-ல் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் அரசு ஊழியரானபோது அரசு ஊழியர் சங்கத்தை கட்டும் பணியிலும் ஈடுபட்டார். 1960-ல் புதுக்கோட்டை காவேரி மில் தொழில்சங்க நிர்வாகியாக கட்சி அறிவித்ததும் இன்முகத்தோடு அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு சங்கப் பொறுப்பை ஏற்றார். தோழர் ஆர்.உமாநாத்துடன் இணைந்து காவேரிமில், நமுணை பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கான எண்ணற போராட்டங்களை முன்னின்று நடத்தினார். 1964-ல் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்து மார்க்சிஸ்ட் கட்சி உதயமானபோது அதில் தன்னை இணைத்துக்கொண்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்களோடு கடலூர் சிறையில் ஒன்னரை ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டார். கட்சியின் திருச்சி மாவட்டக்குழு உறுப்பினராகப் பணியாற்றிய குமாரவேல் புதுக்கோட்டை மாவட்டமாகப் பிரிந்தது முதல் தற்பொழுது வரை கட்சிக்காக அவர் ஆற்றிய பணி மிக முக்கியமானது. புதுக்கோட்டையை தனி மாவட்டமாக அறிவிக்ககோரி அனைத்துப் பகுதி மக்களும் போராட்டம் நடத்திய போது போராட்டக்குழு அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக திறம்பட பணியாற்றி உள்ளார். இனாம் விவசாயிகளுக்கு பட்டா கொடுக்க முடியாது என்ற அரசின் முடிவை எதிர்த்து தோழர் ஆர்.உமாநாத்தோடு; பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தினார். புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்ற மாநாட்டில் மைனர் இனாம் விவசாயிகள் இனி வாரம் கொடுக்க மாட்டோம் என்ற அறைகூவலைத் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எந்த விலையும் கொடுக்காமல் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. புதுக்கோட்டை காமராஜபுத்தில் ஏழை மக்களுக்கு வீட்டுமனை கிடைக்க நடத்திய போராட்டத்திலும் முக்கியப்பங்காற்றினார்.
கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக பல ஆண்டுகளாகப் சிறப்பாக பணியாற்றினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சியின் வர்க்க வெகுஜன அரங்கங்களை கட்டி வளர்த்ததோடு, மார்க்சிய தத்துவத்தை போதிப்பதிலும் சிறந்து விளங்கினார். இவரின் வகுப்பில் பங்கெடுத்த பலர் கட்சியின் பல உயரிய பொறுப்பகளுக்கு வந்துள்ளனர். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநிலச் செயலாளர் மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களில் மாநில, அகில இந்திய அளவில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தார். இப்படி 15.09.1931-ல் பிறந்த தோழர் பெரி.குமாரவேல் நாளைக்கு தனது 90-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். ஒரு நிலபிரபுத்துவ பிறந்து குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ஒரு தலித்கிரிஸ்தவப் பெண்ணை சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டு சொந்த வாழ்கையிலும், பொதுவாழ்க்கையிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் தோழர் பெரி.குமாரவேல். இன்றைக்கும் ஒரு இளைஞனைப்போல சுறுப்புடன் செயல்பட்டுவரும் பெரி.குமாரவேல் புதுக்கோட்டை மாவட்ட கட்சித் தோழர்களுக்கும், இதர அரசியல் கட்சியினருக்கும் மிகுந்த உந்துசக்தியாக விளங்கி வருகிறார். தோழர் பெரி.குமாரவேல் நூறு ஆண்டுகளைக் கடந்து நமக்கு தொடர்ந்து வழிகாட்ட வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.