உதகை, டிச.14 நீலகிரியில் பூண்டின் விலை அதிகரித்துள்ளதால், பூண்டு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோஸ், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு மருத்துவ குணம் உடையதாகவும் உள்ளது. நீலகிரி பூண்டுக்கு எப்பொழுதும் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், உதகை, குந்தா, கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் பூண்டு கிலோ ரூ.400 வரை சென்றதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது வரை விலை பெரிய அளவில் குறையாமல் நிலையாக இருப்பதால், பூண்டு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர். இதுகுறித்து நீலகிரி தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிப்லாமேரி கூறியதாவது, தமிழகத்தில் நீலகிரி பூண்டுக்கென தனி சுவை உண்டு. இதனால், எப்போதும் விலை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு ஆண்டு வழக்கத்திற்கு மாறாக, கிலோ ரூ.70 வரை மட்டுமே பூண்டு ஏலம் போனதால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர். இதனால் வழக்கமாக செய்யப்படும் பூண்டு சாகுபடி குறைந்து, விலை அதிகரித்தது. இந்நிலையில், தற்போது நீலகிரி பூண்டின் விலை கிலோ ரூ. 250 முதல் ரூ.400 வரை கிடைப்பதால் மீண்டும் பூண்டு சாகுபடிக்கு விவசாயிகள் திரும்பி உள்ளனர், என்றார்.