கோவை, மே 11- மக்னா யானையால் விளைநிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளது. எனவே, உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மக்னா யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி, வேட்டைகாரன்புதூர் பொறுப்பாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ஆனைமலை தாலுகா, சரளபதி கிராமத்தில் கடந்த 25 நாட்களாக மக்னா யானையின் நடமாட்டம் காணப்படுகிறது. தினந்தோறும் விளை நிலங்களையும், பயிர்களையும் சேதப் படுத்தி வருகிறது. அங்குள்ள காளியம்மன் கோயில் பகுதியில் தினந்தோறும் மக்னா யானை வந்து செல்கிறது. இதனால் அப் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாத சூழல் உள்ளது. மக்னா யானை எந்த பகுதியிலிருந்து வரும் என்பதை தெரிந்து கொள்ள முடியாததால், மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது. யானை வரும் பகுதியில், 3 கும்கி யானை களை வனத்துறையினர் நிறுத்தியுள்ளனர். ஆனால், மக்னா யானையை பிடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. விளை நிலங்களை யானை தொடர்ந்து சேதப் படுத்தி கொண்டே இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கும், மக்களின் அச்சத் தையும், விளைநிலங்களின் சேதத்தையும் அரசு அவசரகால நடவடிக்கை மூலம் போக்க மக்னா யானையை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும். மேலும், விளை நிலங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.