தருமபுரி, ஆக.10- தருமபுரி அருகே பெட்ரோல் பங்க் வைப்பதற்காக அண்ணனுக்கு கொடுத்த பணத்தை வழங்கக்கோரி மென்பொறியாளர் வீதியில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த நாசம் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத். இவரது சகோதரி மென் பொறியாளர் விஜயபாரதி. இவருக்கு திருமணமாகி மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா காலத்தில் அருண்பிரசாத், ஊரில் பெட்ரோல் பங்க் வைப்பதற்காக தங்கை விஜயபாரதியிடம் பணம் கேட்டார். இதையடுத்து விஜயபாரதி, அண்ணனுக்கு ரூ.25 லட்சம் கொடுத்தார். அதன்பிறகும் அருண்பிரசாத் தங்கையிடம் பணம் கேட்டார். இதையடுத்து விஜயபாரதி, தனது மாமியார் மூலம் ரூ.15½ லட்சம் ஏற்பாடு செய்து கொடுத்தார். பணத்தை பெற்ற அருண்பிரசாத் தனது மனைவி பெயரில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இதை தொடர்ந்து விஜயபாரதி கொடுத்த பணத்தை அண்ணனிடம் திருப்பி கேட்டார். அதற்கு அருண்பிரசாத் மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து விஜயபாரதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தார். இதன்பின் அருண்பிரசாத் ரூ.25 லட்சத்தை திருப்பி கொடுத்தார். இந்நிலையில், மீதம் உள்ள ரூ.15½ லட்சத்தை கேட்டபோது அதை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து விஜயபாரதி அரூருக்கு வந்தார். அங்கு அண்ணனின் பெட்ரோல் பங்க் முன்பாக அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.