உழைக்காமல் உண்ணாதே தம்பி!-உலகம்
உன்னை இருக்குது நம்பி!
தழைத்திடும் வாழ்க்கை அதனால் !-இதை
தரணிக்கு உரைப்பதே நன்னாள்!
உழைப்பைச் சுரண்டிடும் வர்க்கம்-அதை
உணர்ந்துநீ வென்றால் சுவர்க்கம்!
பிழைக்கும் பாட்டாளி வர்க்கம்!-அங்கே
பிழையிலாக் கொள்கைத் துவக்கம்!
உழவும் தொழிலும் கண்கள்!-அதை
உணராதார் நாட்டின் புண்கள்!
விழையும் சிறுகுறு தொழில்கள்-நாட்டை
வென்றிடச் செய்யும் விழிகள்!
பாட்டாளி வர்க்க ஆட்சி-நாட்டைப்
பாது காத்திடும் எழுச்சி!
வாட்டம் போகிடும் அப்போது!-அதை
வாழ்த்தி ஏற்றிடு இப்போது!
பெண்ணுரிமை காக்கப் போராடு!-நீக்கு
பெறுமவர் துன்பத்தை வேரோடு !
கண்ணெனப் போற்றுவோம் பெண்ணை!-அவர்
காக்கும் கடவுளாம் மண்ணை!
உழைப்போர் உணவின்றி வாடுறார்!-அவர்
உழைப்பை முதலாளி திருடுறார்!
பிழையிலாக் கொள்கையை ஆய்ந்திடு !-அதை
பிணைத்தே உள்ளத்தில் ஏந்திடு!