districts

உள்ளத்தில் எந்திரி! - கோவி.பால.முருகு

உழைக்காமல் உண்ணாதே தம்பி!-உலகம்
       உன்னை இருக்குது நம்பி!
தழைத்திடும்  வாழ்க்கை அதனால் !-இதை
       தரணிக்கு உரைப்பதே நன்னாள்!

உழைப்பைச் சுரண்டிடும் வர்க்கம்-அதை
        உணர்ந்துநீ  வென்றால்  சுவர்க்கம்!
பிழைக்கும் பாட்டாளி வர்க்கம்!-அங்கே
        பிழையிலாக் கொள்கைத்   துவக்கம்!

உழவும் தொழிலும் கண்கள்!-அதை
     உணராதார் நாட்டின் புண்கள்!
விழையும் சிறுகுறு தொழில்கள்-நாட்டை
      வென்றிடச் செய்யும்  விழிகள்!

பாட்டாளி வர்க்க ஆட்சி-நாட்டைப்
       பாது  காத்திடும் எழுச்சி!
வாட்டம்  போகிடும்  அப்போது!-அதை
        வாழ்த்தி ஏற்றிடு இப்போது!
  
பெண்ணுரிமை காக்கப்  போராடு!-நீக்கு
        பெறுமவர்  துன்பத்தை வேரோடு !
  கண்ணெனப் போற்றுவோம்  பெண்ணை!-அவர்
         காக்கும்  கடவுளாம்  மண்ணை!

உழைப்போர்  உணவின்றி வாடுறார்!-அவர்
        உழைப்பை முதலாளி  திருடுறார்!
பிழையிலாக் கொள்கையை ஆய்ந்திடு !-அதை
      பிணைத்தே உள்ளத்தில் ஏந்திடு!