districts

img

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுகவினர் உண்ணாவிரத போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் திமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவ படிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நீட் தேர்வால் தமிழகத்தில் பல மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் சென்னையில் ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து,அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்த காலனி பகுதியில் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள திமுக வினர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் பதாகைகளையும், நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதா மற்றும் ஜெகதீசன் ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.மேலும் இதில் தமிழக ஆளுநருக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;