கோவை இராமநாதபுரம் அரசு பள்ளியில் சூயஸ் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் சூயஸ் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு தொட்டி கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கு இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகள் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிறன்று கூடிய பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சூயஸ் திட்டத்தில் பள்ளி மைதானத்தில் நடந்து வரும் சூயஸ் தொட்டி பணிகளை நிறுத்த வேண்டும் என கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மாணவர்கள் சிலர் பள்ளியில் உள்ள மரத்தின் மீது ஏறியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.