சேலம், பிப்.24- மேட்டூர்-கோவிந்தபாடி மீனவர் ராஜாவை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், மேட்டூர்- கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த மீனவர் ராஜா மீன்பிடிக்க சென்றபோது கர்நாடக வனத்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டார். தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்த மீனவர் ராஜா குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது, மேலும் இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக துப்பாக்கிச் சூடு நடத்திய கர்நாடக வனத்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், இறந்த ராஜா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கிட கர்நாடக அரசை நிர்பந்தம் செய்திட வேண்டும். கர்நாடக வனத்துறையின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மேட்டூர் நகர கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.வசந்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, ஏ.ராமமூர்த்தி, நங்க வள்ளி ஒன்றிய செயலாளர் கே.ராஜாத்தி, மேச்சேரி ஒன்றிய செயலாளர் மணிமுத்து, மேட்டூர் நகரம், கொளத்தூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.