தருமபுரி, மே 13- தமிழக அரசு அறிவித்த சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் திடீரென உயர்த்திய சொத்துவரியை மறுபரிசீலனை செய்து குறைத்திடக்கோரி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெருந்திரள் மனு கொடுக்கும் இயக்கத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக தருமபுரி நகராட்சி ஆணையாளர் சித்திரா விஜயனிடம், சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஜெயா மற்றும் நிர்மலா ராணி, சுபா ஆகியோர் மனு அளித்தனர். இதேபோல், அரூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஒன்றியச் செயலாளர் பி.குமார் மற்றும் வி.மாது, எஸ்.கே.கோவிந்தன் ஆகியோர் மனு அளித்தனர். பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் இயக்கத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வே.விசுவநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், பகுதிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, 350க்கும் மேற்பட்ட மனுக்களை பேரூராட்சி அலுவலகத்தில் அளித்தனர்.