நாமக்கல், ஜூலை 11- குமாரபாளையம் நகராட்சி மக்களுக்கு சாயக்கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதென மார்க்சிஸ்ட் கட்சி யினர் புகார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி ஆணையர் குமரனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழனன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, குமார பாளையத்தில் இருந்து பள்ளிபாளையம் வழியாகவும், வெப்படை வழியாகவும், அரசு பேருந்து நாமக்கல் சென்று வந்தது. தற்போது பேருந்துகள் வந்து செல்வ தில்லை. இதனை மீண்டும் இயக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். குமாரபாளையம் பேருந்து நிலையம் சாலையிலிருந்து, காவிரி நகர் வரை உள்ள எடப்பாடி சாலையை அகலப்படுத்த வேண்டும். குமாரபாளையம் நகராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு காவிரி யாற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், அது சுகாதாரம் இல்லாமல் சாயக் கழிவுநீர் கலந்து அசுத்தமாக உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பொருட்டு, புளியம்பட்டி பேரேஜில் இருந்து நீரேற்று நிலையம் அமைத்து, குமார பாளையம் நகர மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். குமாரபாளையம் நகராட்சி பகுதி யில் உள்ள அரசு தாலுகா மருத்துவம னையை தரம் உயர்த்த வேண்டும். மேலும், ஸ்கேன் சென்டர் வசதி செய்து கொடுக்க வேண்டும். போதிய மருத்துவர்கள், செவிலி யர்கள், ஊழியர்களை அதிகப்படுத்தி, 24 மணி நேரமும் மருத்துவமனை செயல்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.முருகேசன், குமாரபாளையம் நகரச் செயலாளர் என்.சக்திவேல், முன்னாள் செய லாளர் எஸ்.ஆறுமுகம், நகரக்குழு உறுப்பி னர் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.