நாமக்கல், செப்.27- பள்ளிபாளையம், சத்யா நகர் பகுதியில் தொடர் திருட்டை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலாம் பாளையம் பேரூராட்சி, அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் இப்பகுதியில் தொடர் திருட்டு நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில், இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவமும் அதிகரித் துள்ளது. எனவே, பள்ளிபாளையம் போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேர ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர். ரவி, நகர கிளை பெருமாள், அன்னை சத்யா நகர் கிளை செயலாளர் சண்முகம், சரவணன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லட்சுமணன், சமூக ஆர்வலர் பால முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.