பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் திடீரென ஒருவார காலமாக குடிநீர் வழக்கத்திற்கு மாறாக சுவை மாறியுள்ளதாக பொள்ளாச்சி நகராட்சிக்கு புகார் வந்தது. இதனையடுத்து பொள்ளாச்சி அம்பராம்பாளையத்திலுள்ள நகராட்சி க்கு விநியோகிக்கப்படும் குடிநீர் சுத்தகரிப்பு நிலைத்திற்கு பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் வியாழனன்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரகாலமாக நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரின் சுவை வழக்கத்திற்கு மாறாக உள்ளதாக பொதுமக்கள் நகராட்சிக்கு புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், வியாழனன்று பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளாநவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் எஸ்.தாணுமூர்த்தி ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்விற்கு பின்னர் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கூறுகையில் ;-
பொள்ளாச்சி நகராட்சி முழுவதும் அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக நகராட்சியின் சுத்தகரிப்பு நீரேற்று மூலமாக நகர பகுதி மக்களுக்கு குடிநீர் சுகாதாரமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில்
குடிநீரின் சுவை மாறுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில் ஆழியாறு ஆற்றில் அதிகளவு பாலாறு நீர் கலப்பதால் சுவை மாறியுள்ளது.
எனவே இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் மற்றும் உதவிபொறியாளரிடம் கலந்து ஆலோசித்ததில் வழக்கமாக ஆழியாறு ஆற்றில் தண்ணீர் எடுக்கும் இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இடது பக்க கரையோரமாக கிணறு அமைத்து அதிலிருந்து சுத்தகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் எடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்கலாம் என, முடிவு செய்துள்ளோம். எனவே இதன்மூலம் ஆழியாறு தண்ணீர் எப்போதுமே சுத்தமாக அதன் பழைய சுவையிலேயே கிடைக்கும்.என இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற இந்த ஆய்வில் நகர மன்ற உறுப்பினர்கள் எம்,ஏ,வி, துரைபாய்,எஸ்.பாத்திமா, பாலு , சண்முகப்பிரியா,கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.