கோவை, ஜூன் 7- கோவையில், கடையை அபகரித்து கட்சி கொடி, பெயர் பலகை வைத்த விவகாரத்தில் பாஜகவினர் உட்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, சாய்பாபா காலனி ராமலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (47). இவர் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளராக இருந்தார். இவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதியன்று புகார் மனு அளித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, பழைய சோறு டாட்.காம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் உணவகங்களுக்கு மூலிகைப் பொருட்கள் வழங்கும் கடை நடத்தி வருகிறேன். சாய்பாபா காலனி, ராமலிங்கம் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவரிடம் வாடகை அடிப்படையில், எனது பணிகளுக்காக கட்டடத்தை வாங்கினேன். எழுத்து பூர்வமாக வாடகை ஒப்பந்தமும் செய்து கொண்டோம்.கட்டடத்தை சீரமைக்க நான் பல லட்சம் ரூபாய் செலவு செய்தேன். இதற்கிடையே பழனிச்சாமிக்கும், எனக்கும் வாடகை ஒப்பந்த விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நான் பாஜகவில் இருப்பதால், பழனிச்சாமி, மாநில தலைவர் அண்ணாமலையிடம் இந்த விவகாரம் தொடர்பாக பேசியிருக்கிறார். அவர் மாவட்ட செயலாளர் உத்தம ராமசாமி மற்றும் சிலரை அனுப்பி கட்டடத்தை காலி செய்யச் சொல்லி மிரட்டினார். இந்நிலையில், நான் இல்லாத நேரத்தில், வாடகை கட்டடத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஆட்களை வைத்து அபகரித்து சென்று விட்டனர். மேலும், நான் பயன்படுத்தி வந்த கட்டடத்தை தற்போது பாஜகவின் கொடி, சேவா மையம் என பெயர் பலகை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கேட்டால், உனக்கும் இந்த இடத்துக்கும் சம்பந்தமில்லை. எதுவாக இருந்தாலும் மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேசிக் கொள் என என்னை மிரட்டி வருகின்றனர். அண்ணாமலை, உத்தம ராமசாமி மீது போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சாய்பாபா காலனி போலீசார் விசாரித்தனர். ஆனால், கடந்த 13 நாட்களுக்கும் மேலாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அண்ணாதுரை, கோவை மாநகர காவல் ஆணையாரை சந்தித்து மீண்டும் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், பாஜகவுடன் தொடர்புடையவர்களின் பெயரை புகார் மனுவில் இருந்து நீக்க போலீசார் சொல்வதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து செவ்வாயன்று இரவு சாய்பாபா காலனி போலீசார் இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், உணவகங்களுக்கு பொருட்கள் வழங்கும் கடையை அபகரித்து கட்சி பலகை வைத்து, கொடி கட்டிய விவகாரம் தொடர்பாக கட்டட உரிமையாளர் பழனிசாமி, அவரது மகள் பிருந்தா, பாஜகவை சேர்ந்த குமரன், செந்தில், கோபி, துரைபாண்டி உள்ளிட்ட 16 பேர் மீது போலீசார் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தமராமசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.