districts

img

மல்லிகார்ஜூன கார்கேவை தள்ளிவிட்டு பாஜக எம்.பி.க்கள் அராஜகம் போராட்டக் களமான நாடாளுமன்ற வளாகம்!

புதுதில்லி, டிச. 19 - இந்தியா கூட்டணி எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பாஜக எம்.பி.க்கள் கீழே தள்ளி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியா கூட்டணியினர் தான், தங்களைத் தாக்கினார்கள் என்று பழிபோட்டுள்ள பாஜகவினர், இதில், பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி மண்டை உடைக்கப்பட்டதாகவும், மற்றொரு பாஜக எம்.பி.யான முகேஷ் ராஜ்புத் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறியும் அவர்களை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அவமதித்த அமித் ஷா

அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில்,  நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளிக்கும் வகையில் செவ்வாயன்று மாநிலங்கள வையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு ‘பேஷன்’ ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு ஏழு ஜென்மங்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்று கேலி செய்திருந்தார்.

இந்தியா கூட்டணி போராட்டம்

இது அண்ணல் அம்பேத்கரையே இழிவுபடுத்துவது என்பதால், அமித் ஷாவின் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும்  எதிர்ப்பு எழுந்துள்ளது. தமது பேச்சிற்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக புதனன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளு மன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர், அமித் ஷாவை பாதுகாக்கும் வகையில் அளித்த விளக்கங்கள் எதுவும் எடுபடவில்லை. இதனால், அமித் ஷா விவகாரம் வியாழ னன்றும் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமித் ஷாவைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.

முந்திக் கொண்டு போராட்டம்

வழக்கமாக நாடாளுமன்ற வாயிலில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தான் பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்துவார்கள். ஆனால், அவர்களை முந்திக் கொண்டு- நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாகவே- நாடாளுமன்ற நுழைவு வாயிலில், அம்பேத்கரை வைத்து இந்தியா கூட்டணி அரசியல் செய்வதாக கூறி போராட்டம் நடத்தினர். தள்ளிவிடப்பட்ட கார்கே மறுபுறத்தில் நாடாளுமன்ற வளா கத்தில் அம்பேத்கர் படங்களை ஏந்தியும், நீல நிற உடைகளிலும் வந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்களும், பிரியங்கா காந்தி, மல்லி கார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் அம்பேத் கரின் உருவப்படம் ஏந்தியபடி நாடாளு மன்றத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை நாடாளுமன்றத்திற்குள் நுழையவிடாமல் பாஜக எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தினர். ஒரு கட்டத்தில் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ‘ஜெய்பீம்’ என அம்பேத்கரின் முழக்கத்தை உரத்து எழுப்பினர். பின்னர் மல்லிகார்ஜூன கார்கேவும் ‘ஜெய்பீம்’ என முழங்கிய படியே நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றார். அவரை பாஜக எம்.பி.க்கள்  கீழே தள்ளி விட்டனர். இதில், கார்கேவின் முழங்காலில் அடிபட்டது. காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒரு நாற்காலியை கொண்டு வந்து அதில் கார்கே-வை அமர வைத்தனர். 

தாக்கப்பட்டதாக நாடகம்

தொடர்ந்து ஏற்பட்ட தள்ளு - முள்ளுவுக்கு இடையே தான், பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி மண்டை உடைந்த தாக கூறி, ரத்தம் வழிந்தோடிய நிலையில் அவரை வீல் சேரில் அமர வைத்து, பாஜக வினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மற்றொரு பாஜக எம்.பி. முகேஷ் ராஜ்புத் எம்.பி.யும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறினர். மாநிலங்களவையில் அமித் ஷா பேசி யதையே- அது அமித் ஷா பேசியதல்ல, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் ஜோடிக்கப்பட்டது என்று பாஜகவினர் அப்பட்டமான பொய்யைப் பரப்பி வரு கின்றனர். தற்போது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தாக்கி மண்டை உடைந்து விட்ட தாக அடுத்த நாடகத்தை அரங்கேற்றினர். எனினும், பாஜக சூழ்ச்சிக்கு அடிபணி யாத இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கரின் புகைப்படங்களை ஏந்தியபடி ஜெய்பீம் முழக்கமிட்டும், அமித் ஷாவை பதவி விலக்கக் கோரியும் தொடர்ந்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

கனமான தடிகளுடன் வந்த பாஜக எம்.பி.க்கள்! மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இந்தியா கூட்டணி எம்பிக்களுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயற்சித்தோம். அப்போது பாஜக எம்.பி.க்கள் என்னை கீழே பிடித்து தள்ளிவிட்டனர். இதனால் நிலைகுலைந்து போன நான் கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இதனால் என்னுடைய முழங்காலில் அடிபட்டிருக்கிறது. ஏற்கனவே முழங்காலில் அறுவை சிகிச்சை செய்த நிலையில் இந்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒரு நாற்காலியை கொண்டு வந்து என்னை அமர வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.  மேலும், “பாஜக எம்.பி.கள் பதாகைகளுடன் கனமான தடிகளையும் கொண்டு வந்திருந்தனர்; அந்த தடிகள் மூலம் இந்தியா கூட்டணி எம்.பி.க்களை பிடித்து தள்ளிவிட்டனர்” என்றும் தமது சமூக வலைதளப் பக்கங்களில் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.