ஈரோடு, ஜுலை 1- விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறுவதால், பிரதான சாலைகளில் கொடி கட்ட கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை அலட்சியப்படுத்தி, தங்களின் இருப்பை காட்ட ஈரோட்டில் பாஜகவினர் சாலையில் கொடி கட்டியிருப்பது பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்ப டுத்தியுள்ளது. ஈரோடு, சோலார் புது பேருந்து நிலையம் அருகே பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக முதல் நாள் கட்சி கொடிகள் சாலையில், ரவுண்டானாவில் கட்டப்பட்டன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, கொடிகள் அகற்றபட்டன. எனினும் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு திடீரென சாலைகளின் இருபுறத்திலும் கொடிகளை கட்டி பாஜகவினர் அளப்பறையில் ஈடுபட்டனர். உரிய அனுமதி யின்றி கொடிகள் உள்ளிட்டவை அமைக்கக் கூடாது என அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இதனை அனைத்து கட்சிகளும் ஏற்றுள்ளது. விபத்துகள் ஏற்பட்டு உயிரி ழப்புகள் நிகழ்ந்துவிடக்கூடாது என மக்களின் மீது அக்கறையோடு அரசியல் கட்சியினர் உள்ள நிலையில், இதுகுறித்து எந்த கவலையும் இல்லாமல், தான்தோன்றித் தனமாக பாஜகவினர் செயல்படுகின்றனர் என பொது மக்கள் வசைபாடுகின்றனர். இதுபோன்ற விதிமுறை மீறல்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.