districts

img

பிஏபி தென்னிந்தியாவின் பொறியியல் அதிசயம்

மேற்குத்தொடர்ச்சி மலைகளிலுள்ள ஆனைமலைக் குன்றுகளில் உற்பத்தியாகி, தமிழக-கேரள மாநிலங்களின் குறுக்கே ஓடும்  சிற்றாறுகள் அரபிக்கடலில் கலக்கும் முன்னர், இரு மாநிலங்களின் நன்மைக்குப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் ‘பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம்’. இத்திட்டத்தின் கீழ்வரும் இரு மாநிலங்களுக்கும் பொதுவான ஆறுகளின் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் கேரள அரசுடன் 1958 இ-ல் தொடங்கின. இருமாநில அரசு அதிகாரிகளின் சமரச ஒப்பந்தத்தின்படி, திட்டத்தின் ஆரம்ப பணிகள் தொடங்கின.அதன்பின் கடந்த 1970 மே 29-ஆம் தேதி இறுதி ஒப்பந்தம் ஏற்பட்டது. கேரளாவின் ஒத்துழைப்புடன் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த தொலைநோக்குத் திட்டத்தில் எட்டு ஆறுகள் இணைக்கப்பட்டுள்ளன.  இவற்றில் ஆனைமலை ஆறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆறு, தூணக்கடவு ஆறு, பெருவாரிப்பள்ளம் ஆறு ஆகியவை ஆனைமலைக்குன்றுகளிலும், ஆழியாறு, பாலாறு ஆகியவை சமவெளியிலும் அமைந்துள்ளன.  இந்த ஆறுகளின் குறுக்கே அணை கட்டி, ஒன்றில் தேங்கும் நீரை, மற்றொன்றுக்கு சுரங்கங்கள் வாயிலாக இணைத்து, கோவை மாவட்டத்தின் சமவெளிப் பகுதியிலும், கேரள மாநிலத்தின் சித்தூர்ப் பகுதியிலும் பாசனத்திற்குப் பயன்படுகிறது.  இத்திட்டத்தில் உள்ள ஆறுகள் கடல் மட்டத்துக்கு மேல் 3,800 அடியிலிருந்து, 1,050 அடி வரை அமைந்துள்ளன.  இரண்டு ஆறுகளின் மட்டங்களுக்கிடையில் கிடைக்கும் வீழ்ச்சி, நீர்மின் உற்பத்திக்கும் வாய்ப்பளித்துள்ளது. இத்திட்டத்தில் நீராறு மேல் சிற்றணை, நீராறு கீழ் அணை, ஆனைமலையாறு நீர் திருப்புச் சிற்றணை, சோலையாறு அணை, பரம்பிக்குளம் அணை, தூனக்கடவு அணை, பெருவாரிப் பள்ளம் அணை, ஆழியாறு மேல் அணை, ஆழியாறு அணை, திருமூர்த்தி அணை, உப்பாறு அணை ஆகிய அணைகளும், ஏராளமான சுரங்கப்பாதைகளும், சோலையாறு ஒன்று, இரண்டு, சர்க்கார்பதி, ஆழியாறு ஆகிய மின் உற்பத்தி நிலையங்களும் அமைந்துள்ளன. இதுதவிர, சமநிலைக் கோட்டுக் கால்வாய், ஆழியாறு நிரப்புக் கால்வாய், சேத்துமடைக் கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய், பொள்ளாச்சிக் கால்வாய், பரம்பிக்குளம் பிரதானக் கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய், உப்பாறு வலது மற்றும் இடது கரைக் கால்வாய்கள் ஆகிய கால்வாய்களும் இடம்பெற்றுள்ளன. இந்த திட்டத்தில் முக்கியப் பங்காற்றும் கால்வாய்களில், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து திருமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் சமநிலைக் கோட்டுக் கால்வாயைத் தவிர, ஏனைய எட்டு கால்வாய்களும் பாசனக் கால்வாய்கள் ஆகும்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

தமிழகத்தில் அதிக கொள்ளளவு உள்ள முதல் அணை மேட்டூர் (93.5 டிஎம்சி). இரண்டாவது பவானிசாகர் அணை (32.8 டிஎம்சி). மூன்றாவது பரம்பிக்குளம் அணை (17.82 டிஎம்சி).  பரம்பிக்குளத்திலிருந்து தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் வழியாக 7 கி.மீ தூரம் திறந்தவெளி கால்வாய் மூலம் வரும் தண்ணீர், டாப்சிலிப் அருகே கேரள எல்லைக்குள் சுரங்கம் வாயிலாக சர்க்கார்பதி மின்நிலையம் வருகிறது.  அங்கிருந்து சமமட்ட வாய்க்கால் (ConTour Canal) வாயிலாக 49.3 கி.மீ பயணம்செய்து, திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது. இங்கு 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு சம மட்ட வாய்க்காலில் நீர் செல்லும் மின்சாரம் தயாரிக்க முடியாத நேரத்தில் புறவழிப்பாதை வழியே தண்ணீர் எடுக்கப்படும். அதேபோல், சர்க்கார்பதி மின்நிலையத்திலிருந்து வகரையாறு வாயிலாக செல்லும் நீர், ஆழியார் ஊட்டு வாய்க்கால் வழியே 13.6 கி.மீ பயணம் செய்து ஆழியார் சென்று சேர்கிறது.  இதில் 140 கனஅடி நீர் செல்லும் மொத்தமுள்ள 9 அணைகளில் மலைகளில் உள்ள 6 அணைகள் 

பொறியியல் அதிசயம்

காண்டூர் கால்வாய் எனப்படும் சமநிலைக் கோட்டுக் கால்வாய் ஓர் இணையற்ற, அதேசமயம் கடினமான பொறியியல் கட்டுமான அதிசயமாகும். கால்வாயின் மொத்த தூரமான 49.30 கிலோ மீட்டரில், 42 கிலோ மீட்டர் மலையிலும் மீதி தூரம் சமவெளியிலும் செல்கிறது. சமவெளியிலிருந்து சுமார் 300 அடிக்கு அதிகமான உயரத்தில் பல வடிகால்களும், செங்குத்தான வீழ்ச்சியுடன் கூடிய கரடுமுரடான பாறைகளும் நிறைந்த ஆனைமலைக் குன்றுகளின் சரிவினூடே, பல பள்ளத்தாக்குகளுக்கும், பல மலைத் தொடர்களுக்கும் குறுக்கே செல்லும் இக்கால்வாய் சமநிலைக் கோட்டில் அமைக்கப்பட்டுள்ளது.  திட்டத்தின் உயிர்நாடியாகவும் இது விளங்குகிறது.  மேலே  உள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து திருப்பி விடப்படும் நீரை, சர்க்கார்பதி மின் நிலையத் திலிருந்து திருமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு இது கொண்டு செல்கிறது.வினாடிக்கு 1,160 கன அடி நீர் செல்லும் இக்கால்வாயின் கீழ், நேரடிப் பாசனம் எதுவும் இல்லை. சிக்கனத்தையும் பயனையும் கருதி உயரமான மலைத்தொடர்கள் குறுக்கிடுமிடங்களிலும், சுற்று வழி மிக நீண்டதாக உள்ள இடங்களில் கால்வாய் வெட்டுவதால் ஏற்படும் அதிகச் செலவைக் குறைக்கும் பொருட்டு சுரங்கப் பாதைகள் குடையப்பட்டுள்ளன. இச்சுரங்கப்பாதைகளில் நீரியக்க, கட்டுமான அமைப்புப் பயன் கருதி குதிரை லாட வடிவம் பின்பற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்திலேயே மிக நீளமான சுரங்கம் பரம்பிக்குளம் ஆழியார் திட்டங்களுக்கிடையே அமைந்துள்ளது.   சிமெண்டு பூசப்பட்ட இச்சுரங்கப்பாதையின் நீளம் சுமார் 16,000 அடி. குதிரை லாட வடிவமுள்ள இச்சுரங்கப்பாதையின் விட்டம் 14.25 அடி.  இச்சுரங்கப்பாதையின் குடைவு வேலை உச்சக் கட்டத் திலிருந்தபோது நாளன்றுக்கு 30 அடி நீளம் சுரங்கம் உருவானது.

நல்லெண்ண அடிப்படையில் ஒப்பந்தம்

பரம்பிக்குளம்- ஆழியார் திட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் -கேரளா இடையேயான ஒப்பந்தங்களை ஒரு நல்லெண்ண அடிப்படையில் அன்றைய  தமிழக முதல்வர் காமராஜர் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். இந்த ஒப்பந்தத்தில் மழை குறைவான காலத்தில், நீரை எப்படி பகிர்ந்து கொள்வது என்று குறிப்பிடவில்லை. அதனால் இரு மாநில கூட்டங்களில், இருக்கும் நீரை எங்களுக்கு தந்துவிட்டுதான் மீதம் இருந்தால்  உங்களுக்கு என கேரள அதிகாரிகள் வாதிடுவார்கள். இது ஒரு நல்லெண்ண ஒப்பந்தம். தண்ணீர் இருக்கும்போது கேரளா- தமிழகத்திற்கு 44:56 விகிதத்தில் பகிர முடிகிறது. மழை குறைந்த காலத்தில் இதே அளவில் பகிர்ந்துக்கொள்ளலாம் எனில் சம்மதிக்கமாட்டார்கள். அந்தந்த அதிகாரிகளின் மனநிலைக்கேற்ப சண்டை சச்சரவு வேண்டாம் என்ற அடிப்படையில் கடைசியில் ஏதோ ஒரு அளவை ஏற்றுக்கொண்டு சுமூகமாக கையெழுத்திட்டு செல்வது வழக்கம்.  இந்த ஆற்றுப் படுகை மேலாண்மை திட்டம் இரு மாநிலங்கள் தொடர்புடையதால், கேரளாவும் இணைந்து செயலாற்ற முன்வந்தால் வெள்ளம், வறட்சி, பயிர்களுக்கானநோய் எனும் பேரிடர்கள் எங்கும் ஏற்படாது. உடனடி, குறுகிய கால, நீண்டகால தீர்வுகளை திட்டமிட்டால் மட்டுமே எதிர் காலத்தில் உழவாண்மை மேம்படும்.

தண்ணீரை எப்படி சேமிக்கலாம்?

ஓராண்டில் ஜூலை முதல் ஜூன் வரை ஒரு அணை மூலம் எவ்வளவு நிலம் பாசன வசதி பெறுகிறது என்பதுதான் கணக்கு. பரம்பிக்குளம்- ஆழியார் பாசன திட்டத்தின் மூலம் 4.50 லட்சம் ஏக்கர் பயனடைகிறது என்பார்கள். ஆனால், இது இரண்டு ஆண்டுகளுக்கான கணக்கு. ஓராண்டில் சராசரியாக 2.25 லட்சம் ஏக்கர் வரையே பாசன வசதி பெறுகிறது. இதை மாற்ற வேண்டுமெனில், கிளை வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் வழங்குவதை மாற்றி, சமுதாய நுண்நீர் பாசன திட்டம் என்ற முறையின் மூலம் பூமிக்குள் புதைக்கப்பட்ட குழாய்கள் வழியாக தண்ணீரை வழங்கினால், 4.50 லட்சம் ஏக்கருக்கும் ஓராண்டில் தண்ணீர் வழங்க முடியும். இந்த பகுதி விவசாயிகள் ரசாயன முறை விவசாயத்திலிருந்து விடுபட்டு, இயற்கை வேளாண்மை முறைக்கு மாறினால் வறட்சி காலத்தில் தாக்குபிடிக்கும் திறன் இருக்கும். தண்ணீரும் 30 முதல் 40 சதவீதம் வரை சேமிக்கப்படும். இதன்மூலம் கூடுதல் பரப்பளவு நிலங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.