districts

ஊடகவியலாளர்கள் குறித்து அவதூறு பரப்பியவர் கைது

கோயம்புத்தூர், அக். 2. கோவையில் உள்ள மூத்த ஊடக வியலாளர்கள் குறித்து முகநூல் உள்ளிட்ட  சமூக வலைத்தளங்களில் உள்நோக்கத் தோடு அவதூறு பரப்பியவரை புதனன்று கோவை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கோவையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்த இரண்டு பேரை மாநகர காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுடன் பணத்திற்காக சில  பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து  செயல்பட்டதும் காவல்துறை விசாரணை யில் தெரிய வந்தது. இந்த பட்டியலை வெளியிட வேண்டும் என கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தது.

இந்நிலையில் மருது என்கிற மருதாச்சலம் என்பவர், இவர் ஏற்கனவே பத்திரிகையாளர் போர்வையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்.  பெண்கள் உடைமாற்றும் வீடியோவை எடுத்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற குற்றச்சாட்டில் குண்டர் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டவர்.

இவர், மூத்த பத்திரிகையாளர்கள் மீது உண்மைக்கு புறம்பாக உள்நோக்கத் தோடு பல்வேறு அவதூறு கருத்துக் களை சமூக ஊடகத்தில் பதிவிட்டி ருந்தார்.  சமூகவிரோத செயல்களுக்கு எதிராக  துணிச்சலாக செயல்படும் பத்திரிகை யாளர்களை மிரட்டுவதற்கு இவரை சமூகவிரோதக் கும்பல் பயன்படுத்தி வருகின்றன. 

தற்போது, பட்டியலை வெளியிட கோரும் பத்திரிகையாளர்களை மனரீதி யாக உளைச்சலை ஏற்படுத்தி, பிரச்ச னையை திசைதிருப்பி உண்மை குற்றவாளி களை தப்பிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சமூக ஊடகக்குழுக்களிலும், மூத்த பத்திரிகை யாளர்கள் மீது அவதூறு கருத்துக்களை பகிர்ந்து வந்தார். இதனையடுத்து, இவர் மீது மூத்த பத்திரிகையாளர்கள் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரின் பேரில், மருது என்கிற மருதாச்சலம் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை புதனன்று போலீசார் கைது செய்தனர்.