districts

img

தேர்தல் விதிகளை மீறி அண்ணாமலை பிரச்சாரம்; அண்ணாமலை உள்ளிட்ட 300 பேர் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

தேர்தல் விதிகளை மீறி பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, அண்ணாமலை உள்ளிட்ட 300 மீது 2 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை,  சூலூரில் பிரச்சாரத்திற்கு வந்த தமிழக பாஜக தலைவரும் கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை நேற்று இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட முயன்றதாக கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர். கோவை மாநகர போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், அவரது பிரச்சார வாகனத்தை விட்டு இறங்கி நடந்து வந்த அண்ணாமலை,  கோவை மாவட்ட எல்லை பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக மாநில துணை வணிக அலுவலர் சண்முகப்பிரியா தலைமையிலான  தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில், 143 மற்றும் 341 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மற்றும் 300 நபர்கள் மீது சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

4 பிரிவுகளில் வழக்கு பதிவு

இரவு 10 மணிக்கு மேல் ஒண்டிபுதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு, வெடிபொருட்களை தவறாக கையாளுதல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய 4 பிரிவுகளில் சிங்கநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.